Friday, December 10, 2010

புரட்சித்தலைவி

தலைப்பைப் பார்த்தவுடன், நான் ஏதோ ஜெயலலிதாவைப் பற்றி எழுதியிருக்கிறேன் என்று நினைத்தீர்களேயானால் , நிச்சயம் ஏமாந்து போவீர்கள்...! ஜெயலலிதாவுக்கும் இந்தத் தலைப்புக்கும் எந்த சம்பந்தமுமில்லை. இந்தப் பெயர் தொண்டர்கள் வைத்த பெயர். பொதுவாக... புரட்சி என்கிற சொல் அரசியலோடு அடையாளப்படுத்தப்படுகிறது. .. ஆனால், உண்மையான அர்த்தமே வேறு...! புரட்சி என்கிற அடைமொழி வைத்திருக்கும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, விஜயகாந்த் போன்றவர்கள் எந்தப் புரட்சியும் செய்யவில்லை என்பதுதான் உண்மை...!


புரட்சி என்பது சமூக மாற்றத்தைக் குறிப்படுகின்ற ஒரு சொல்...! பிரெஞ்சுப்புரட்சி( French Revolution ) என்று வரலாற்றில் படிக்கிறோம். ஐரோப்பாவில் மிகப்பெரிய சமூக மாற்றத்திற்கான; முதல்படியாக பிரெஞ்சுப்புரட்சியை வரலாற்று ஆய்வாளர்கள் நினைக்கிறார்கள்.. அப்படி... தமிழ்ச் சமுதாயத்தில், இலக்கியத்தின் மூலமாக புரட்சி செய்தவர் யார்...?!

எட்டாம் நூற்றாண்டில்...கிட்டத்தட்ட 1200 வருடங்களுக்கு முன்பு; வாழ்ந்தவள்... பூமாதேவியின் அம்சமாகச் சொல்லப்படுகிறவள்...தமிழை
ஆண்டவள் என்பதால் அவ்ள் ஆண்டாள்...! திருத்துழாய்ச்செடியின்( துளசி ) கீழ் கண்டெடுக்கப்பட்டவள்... கோதா என்கிற பெயருக்கு பூமி என்றொரு அர்த்தமுண்டு... ஆதலால்.. கோதை நாச்சியார் என்றழைக்கப்பட்டவள்...!


நாலாயிரத் திவ்யப்பிரபந்தத்தில் நான் மிகவும் விரும்பிப் படிப்பது.. அவளின் வாய்மொழியான நாச்சியார் திருமொழி....! ஒரு இல்க்கியப்
படைப்பாளியாகவோ, ஆழ்வார்களில் ஒருத்தியாகவோ; நான் என்றுமே நினைத்துப் பார்த்ததில்லை...! சிறு வயது முதல், அவளை என்னுடைய
தோழியாகத்தான் உணர்ந்து வந்திருக்கிறேன். அவளைப்பற்றிப் பேசும்போதும், எழுதும்போதும், அவளின் திருமொழிகளைப் பாடும்போதும்...
பரவச நிலைக்கேப் போய்விடுவேன்..! அவளுக்குக் கிடைத்த பேரின்பம் எனக்கும் ஒரு நாள் கிடைக்கும் என்று தீவிரமாக நம்புபவள் நான்..!

அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு..? என்றிருந்த காலத்தில்...தமிழ்மொழியின் மிகச் சிறந்த பெண்கவிஞராக... ஆண்டாளைத் தவிர வேறு
யாரை நாம் நினைக்கமுடியும்...?! வீட்டைவிட்டு பெண்கள் அதிகம் வெளிவராத ஒரு காலத்தில், கன்னிப்பெண்களை...அதுவும் விடியற்காலையில், எழுப்பி பாவை நோன்பு நோற்க வைத்தவள்..!

பலதார மணம் இருந்த பண்டையச் சமூகத்தில்.. பெண் என்ன நினைக்கிறாள்...? அவளின் உள்ளக்கிடக்கைதான் என்ன...? என்பதையெல்லாம்
அறிய முடியாத... நினைத்துக்கூடப் பார்க்கமுடியாத... ஒரு காலக்கட்டத்தில்...பெண்ணின் மன உண்ர்ச்சிகளை...அந்த மனதில் தோன்றுகிற
காதலையும்...காமத்தையும்...மிக வெளிப்படையாக...பெண்ணின் வாய்மொழியாகவே எழுதியவள்...!

ஊனிடை ஆழிசங்கு உத்தமர்க்கென்று
உன்னித்தெழுந்த என் தட முலைகள்
மானிடவர்க்கென்று பேச்சுப்படில்
வாழகில்லேன் கண்டாய் மன்மதனே...!

எத்துணை தைரியமாகத் தன் காதலை எழுதியிருக்கிறாள்...?! நீங்கள் நினைக்கலாம்...அவள் காதலித்தது அந்தப் பரந்தாமனையல்லவா..?
அதனால்தான் அந்தத் தைரியம் என்று...! இந்த உணர்வை...இலக்கியவாதிகள் , காதல் என்று சொல்கிறார்கள்...! ஆன்மீகவாதிகள், பக்தி என்று
சொல்கிறார்கள்...! எல்லாவற்றுக்கும் காரணம் மூன்றெழுத்து...! அன்பு..! காதலுக்கும், பக்திக்கும் அதே மூன்றெழுத்துதான்...!


இதோ.. இன்னொரு வெளிப்படையான ஒரு பாசுரம்...!
பொங்கிய பாற்கடல் பள்ளி கொள்வானைப்
புணர்வதோர் ஆசையினால் என்
கொங்கை கிளர்ந்து, குமைத்துக் குதூகலித்து
ஆவியை ஆகூலம் செய்யும்....

யோசித்துப் பாருங்கள்... அன்றைய சமூகத்தில்... ஒரு பெண் தன் மனதில் தோன்றுகிற காமவேட்கையைப் பற்றி இப்படி வெளிப்படையாக
எழுத முடியுமா..?! இது புரட்சி இல்லையா...?! இவளல்லவோ புரட்சித்தலைவி...!

தமிழுக்கு அழகே 'ழ' கரம் தான்..! ஆண்டாளின் தமிழ்ப்புலமைக்கும், இலக்கணத்தில் அவளுக்கிருந்த ஆளுமைக்கும்...ஒரு சிறிய
உதாரணத்தை இங்கே தருகிறேன்... எல்லா வரிகளிலும் 'ழ'கரம் வரும்படியாக ஒரு பாசுரம் அமைத்திருக்கிறாள்...!

எழிலுடைய அம்மனைமீர்! என்னரங்கத் தின்னமுதர்
குழலழகர், வாயழகர், கண்ணழகர், கொப்பூழில்
எழுகமலப் பூவழகர், எம்மானார் என்னுடைய
கழல்வளையைத் தாமும் கழல்வளையே ஆக்கினரே....!

வாழ்நாளில் ஒருமுறையேனும் ஆண்டாளைப் படியுங்கள்...! நாச்சியார் திருமொழியோடு உங்கள் மனம் ஒன்றிப் போவதை
நீங்களே உணர்வீர்கள்....!

Saturday, November 6, 2010

மழை நாட்கள்......ஒரு நினைவலைகள்

மழை ... எனக்கு எப்போதுமே அலுக்காத ஒரு விஷயம். என் வாழ்வின் முக்கிய தருணங்களில், மழை என் கூடவே பயணித்து வந்திருக்கிறது. ஒரு ஐப்பசி அடை மழையில் எனக்குத் திருமணம் ஆயிற்று. பிறிதொரு மழை நாளில் தான் எனக்கு ஒரு மகன் பிறந்தான். அவனுக்கும் மழை [ வருண் ] என்றே பெயர் வைத்தேன். இப்படி எனக்கான, பிரத்யேக மழை நாட்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்... இப்பவும் நினைவில் நிற்பது பள்ளிப்பருவ மழைக்காலங்கள்தான். எங்கள் ஊர்..கோவில் நகரமான கும்பகோணம் என்கிற குடந்தை நகரம். நாங்கள் பிறந்து, வளர்ந்து, மழையில் நனைந்த ஊர்...! எங்கள் வீடு காவிரிக்கரையோரமாக அமைந்திருந்தது. மொட்டை மாடியில் நின்றுகொண்டு, காவிரியில் புதுப்புனல் வருவதை; அதுவும் மழையில் வேரறுந்த மரங்கள், ஆடுமாடுகள், சிலசமயம் சடலங்களும் அடித்துச் செல்லப்படுவதை ஒருவித கிலியோடுப் பார்த்துக்கொண்டிருப்போம்.. எல்லாப்படித்துறைகளும் மூழ்கி, தண்ணீர் கொல்லைக்குள் புகுந்துவிடும். எங்கும் ஒரே ஜலப்பிரவாகமாகக் காட்சியளிக்கும்..! நாம் ஒரு தீவுக்குள் இருப்பதைப் போன்ற பிரமை ஏற்படும். வீட்டில் இருக்கும் ஆனந்த விகடன், ரீடர்ஸ் டைஜஸ்ட், ஸ்புட்னிக் பத்திரிக்கைகளின் அட்டைகள் காகிதக் கப்பல்களாக உருமாறிவிடும்..! யார் கப்பல் முன்னாடி போகிறது..? என்று அங்கே ஒரு போட்டியே நடக்கும். எங்களைச் சமாளிப்பது அம்மாவுக்குப் பெரிய தலைவலி..! இந்த இருபது வருட சென்னை வாசத்தில் நான் பார்த்த, பார்க்கின்ற மழை; சாக்கடை நீர் கலந்த மழை..! தெருவில் கால் வைக்கவே முடியாது.. மாதம் மும்மாரி என்று இலக்கியத்தில் வரும். இப்போதெல்லாம் பருவம் தப்பிப் பெய்கிற மாரிதான்..! Global Warmingங்கால் உலகத்தட்பவெப்பனிலையே மாறிவிட்டது. மரங்களை அழித்துப் பன்மாடிக்குடில்களைக் கட்டிக்கொண்டிக் கொண்டிருக்கிறோம்.. .வெப்பம் தாங்கமுடியாமல், குளிர்சாதன வசதி செய்து கொள்கிறோம். ஏசி அறையில் அமர்ந்து, கம்ப்யூட்டரில் மழைப்பற்றி எழுதிக்கொண்டிருக்கிறோம்...! நமக்கு எங்கே புரியப் போகிறது...இந்தக் குறளின் அர்த்தம்...?!
"நீர் இன்று அமையாது உலகெனின் யார் யார்க்கும்
வான் இன்று அமையாது ஒழுக்கு..."

Sunday, October 24, 2010

மொழி பெயர்ப்புகள் பற்றிய ஒரு பார்வை

பொதுவாக, தமிழின் பிரபல படைப்புகள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு, விற்பனையில் பெரிதாக எந்த சாதனையும் செய்யவில்லை. காரணம், lobby என்று சொல்லப்படுகின்ற marketing techniques பற்றி நமக்கு ஒன்றுமே தெரியாது என்பதுதான். திருக்குறள் பிரபலமானதற்குக் காரணம்,ஜி.யு.போப் என்ற ஆங்கிலேயர் அதை மொழி பெயர்த்ததுதான். மற்றபடி சங்க இலக்கியம், திவ்யப்பிரபந்தம்,தேவாரம் சிலவற்றை ஏ.கே.ராமானுஜம் மொழி பெயர்த்திருக்கிறார். அது ஆங்கில வாசகர்களிடையே எந்த அளவுக்கு வரவேற்பைப் பெற்றிருக்கிறது என்று சொல்லமுடியவில்லை. கல்கியின் சிவகாமியின் சபதத்தை அவருடைய பேத்தி கௌரிராம்நாரயண் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார். மண்வாசனையோடு [ flavour] அதைப் படிக்க முடிகிறதா என்று கேட்டால்,பதில் சொல்லத்தெரியவில்லை.


இப்படி நம்முடைய மொழியாக்கங்கள் எல்லாமே utter flop! திரைப்படத்துறையை எடுத்துக்கொள்ளுங்கள். மிகத்தரமான படங்கள் இந்தியாவில் தயாராகின்றன. ஆனால் ,எந்த ஒரு படத்திற்கும் லகான் உள்பட; ஆஸ்கரின் அந்நிய மொழி விருது வழங்கப்படவில்லை. சீன, கொரிய. ஜப்பானிய, ரஷ்யப்படங்களுக்கு இருக்கிற மரியாதை இந்தியப் படங்களுக்குக் கிடையாது. பாட்டு, நடனம் , இன்னபிற கரம்மசாலாக்கள் சேர்த்து எடுக்கப்படும் இந்தியப்படங்கள் வெறும் பொழுதுபோக்குக்கு மட்டுமே[entertainment] என்கிற அவர்களுடைய நினைப்பும் ஒரு காரணம். லாஸ் ஏஞ்சலிஸ் போய், அமெரிக்கர்களிடம் lobby பண்ணுகிற தைரியம் நமக்குக் கிடையாது.


இதை விட, இன்னொரு வேடிக்கை; இந்தியாவில் இந்தி மொழி மட்டுமே பேசப்படுகிறது என்று இன்னமும் பல ஆங்கிலேயர்கள் நினைத்துக்கொண்டிருப்பதுதான். குறிப்பாக, அமெரிக்கர்களுக்கு இந்தியா பற்றிய அறிவு மிகவும் குறைவு. பாரத மாதா, செப்பு மொழி பதினெட்டுடையாள் என்பது பாவம் அவர்களுக்குத் தெரியாது. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம் உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் மொழிப் பெயர்ப்புக்கென்று தனி துறையே இருக்கிறது. உருப்படியாக இதுவரை எதுவும் செய்யாத வெட்டி department! உலகெங்கும் இருக்கிற தமிழ்ச்சங்கங்கள் மூலமாக மொழியாக்கப்படைப்புக்களை ஆங்கில வாசகர்களிடையே பிரபலப்படுத்தலாமே..?!