Sunday, October 24, 2010

மொழி பெயர்ப்புகள் பற்றிய ஒரு பார்வை

பொதுவாக, தமிழின் பிரபல படைப்புகள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு, விற்பனையில் பெரிதாக எந்த சாதனையும் செய்யவில்லை. காரணம், lobby என்று சொல்லப்படுகின்ற marketing techniques பற்றி நமக்கு ஒன்றுமே தெரியாது என்பதுதான். திருக்குறள் பிரபலமானதற்குக் காரணம்,ஜி.யு.போப் என்ற ஆங்கிலேயர் அதை மொழி பெயர்த்ததுதான். மற்றபடி சங்க இலக்கியம், திவ்யப்பிரபந்தம்,தேவாரம் சிலவற்றை ஏ.கே.ராமானுஜம் மொழி பெயர்த்திருக்கிறார். அது ஆங்கில வாசகர்களிடையே எந்த அளவுக்கு வரவேற்பைப் பெற்றிருக்கிறது என்று சொல்லமுடியவில்லை. கல்கியின் சிவகாமியின் சபதத்தை அவருடைய பேத்தி கௌரிராம்நாரயண் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார். மண்வாசனையோடு [ flavour] அதைப் படிக்க முடிகிறதா என்று கேட்டால்,பதில் சொல்லத்தெரியவில்லை.


இப்படி நம்முடைய மொழியாக்கங்கள் எல்லாமே utter flop! திரைப்படத்துறையை எடுத்துக்கொள்ளுங்கள். மிகத்தரமான படங்கள் இந்தியாவில் தயாராகின்றன. ஆனால் ,எந்த ஒரு படத்திற்கும் லகான் உள்பட; ஆஸ்கரின் அந்நிய மொழி விருது வழங்கப்படவில்லை. சீன, கொரிய. ஜப்பானிய, ரஷ்யப்படங்களுக்கு இருக்கிற மரியாதை இந்தியப் படங்களுக்குக் கிடையாது. பாட்டு, நடனம் , இன்னபிற கரம்மசாலாக்கள் சேர்த்து எடுக்கப்படும் இந்தியப்படங்கள் வெறும் பொழுதுபோக்குக்கு மட்டுமே[entertainment] என்கிற அவர்களுடைய நினைப்பும் ஒரு காரணம். லாஸ் ஏஞ்சலிஸ் போய், அமெரிக்கர்களிடம் lobby பண்ணுகிற தைரியம் நமக்குக் கிடையாது.


இதை விட, இன்னொரு வேடிக்கை; இந்தியாவில் இந்தி மொழி மட்டுமே பேசப்படுகிறது என்று இன்னமும் பல ஆங்கிலேயர்கள் நினைத்துக்கொண்டிருப்பதுதான். குறிப்பாக, அமெரிக்கர்களுக்கு இந்தியா பற்றிய அறிவு மிகவும் குறைவு. பாரத மாதா, செப்பு மொழி பதினெட்டுடையாள் என்பது பாவம் அவர்களுக்குத் தெரியாது. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம் உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் மொழிப் பெயர்ப்புக்கென்று தனி துறையே இருக்கிறது. உருப்படியாக இதுவரை எதுவும் செய்யாத வெட்டி department! உலகெங்கும் இருக்கிற தமிழ்ச்சங்கங்கள் மூலமாக மொழியாக்கப்படைப்புக்களை ஆங்கில வாசகர்களிடையே பிரபலப்படுத்தலாமே..?!