Thursday, August 13, 2015


இலங்காபுரிக்குச் செல்ல வேண்டுமென்றால், இந்து மகாசமுத்திரத்தைக் கடந்தாக வேண்டும்

கொங்கிற் பொலிந்த தாமரையின்

குழுவுந் துயில்வுற்று இதழ் குவிக்கும்

கங்குற் பொழுதுந் துயிலாத

கண்ணன் கடலைக் கண்ணுற்றான்…”

தேனுடன் திகழ்கின்ற தாமரை மலர்களும், இரவில் இதழ்களைக் குவித்துக் கொள்ளும்பிராட்டியைப் பிரிந்தபின்பு, இரவு நேரத்திலும்; துயிலாத இராமபிரான், அந்தப் பெருங்கடலைக் கண்டான்எம்பெருமானின் கண்ணைத் தாமரைக்கு உவமையாக்குகிறான் கம்பன்

 

கடலைக் காண்கிறபோது, காதல்மனைவியைப் பிரிந்த துன்பம் எம்பிரானை வாட்டுகிறது

பழிக்குங் காமன் பூங்கணைக்கும்

பற்றா நின்றான்…”

மன்மதனுடைய மலரம்புகளுக்கும் இலக்காகத் திகழ்ந்த இராமபிரானுடைய அழகிய புயங்கள் மீது, கடலின் உயர்ந்த அலைகளிலிருந்து, தென்றல் தூற்றும் திவலை( அலைத்துளி) கொல்லன் உலையிடத்துத் துள்ளும் தீப்பொறியைப் போல அவனைச் சுடுகிறது…. காதலர் பிரிவுக்கு எப்பொழுதுமே, “ நீர்த்திவலை சுடுதல் உவமையாகக் கூறுவது மரபு

தமிழ்த்திரைப்படங்களில் நடுநிசியில், கிணற்றிலிருந்து தண்ணீரை இறைத்துத் தலையில் கொட்டிக் கொள்ளும் காட்சிகளை நினைவுப்படுத்திக் கொள்ளலாம்…. J

 

தூரமில்லை மயிலிருந்த சூழல் என்று மனம் செல்ல….”

மயில் போன்ற சாயலுடைய பிராட்டி, சிறைப்பட்டிருக்கும் இடம் வெகு தூரத்தில் இல்லையென்று…. அவளிருக்குமிடம் மனம் செல்கிறது….!

பிராட்டி சிந்துகின்ற கண்ணீர்த்துளிகள்; அலைகள் போல் மென்மேல் பெருகிவந்து, வள்ளல் மலர்த்தாளில் வீழ்வது ஏய்க்கும்அலைகள்; எம்பெருமானின்,  தொடுகழல் கமலம் அன்ன தாளைத் தழுவுதலை, கம்பன் எத்தனை அழகாகக் கற்பனை செய்கிறான்J

 

இராமாவதாரத்தில்தான், “ வள்ளல் என்கிற அடைமொழியில் எம்பெருமான் போற்றப்படுகிறான்

தெள்ளி யார்பலர் கைதொழும் தேவனார்

வள்ளல் மாலிருஞ் சோலை மணாளனார்….”

கோதை நாசியார்…. நாச்சியார் திருமொழி….

கள்வா ! கடன்மல்லைக் கிடந்த கரும்பே !

வள்ளால் ! உன்னை யெங்ஙனம் நான் மறக்கேனே !...

திருமங்கையாழ்வார்…. பெரிய திருமொழி….

 

குயில் போன்ற குரலினளான பிராட்டியின் துன்பத்தைப் போக்கவும், தேவர்கட்கு அரக்கரால் நிகழ்ந்த மனக்குறைகளை ஒழிக்கவும், “ கை வெம் சிலையன் திருக்கரத்தில் கோதண்டம் என்னும் வில்லை ஏந்தியவனும், கங்கைநதி பாயப்பெற்ற அழகிய கோசல நாட்டை உடையவனான ஸ்ரீ இராமச்சந்திர மூர்த்தியைப்     பார்த்து, அலைகள் கைகளை உயர்த்தி, பெருமுழக்கத்துடன் ஆரவாரிக்கின்றனவாம்…!

 

இன்ன தாயக் கருங்கடலை

யெய்தி யிதனுக் கெழுமடங்கு

தன்ன தாய நெடுமானத்

துயரம் காதல் இவை தழைப்ப….”

யுத்த காண்டம்…. கடல்காண் படலம்….

இத்தகையதான கரிய கடலையடைந்து; இந்தக் கடலைக் காட்டிலும் ஏழுமடங்காகத் தன்னிடமுள்ள மிக்க மானமும், துன்பமும், ஆசையுமாகிய இவைகளின் மேல்விளைவு என்னது ஆகும்…. இனி நிகழக்கூடிய செயல் என்ன…? என்று ஆராய்ந்திருந்தான் ஸ்ரீ இராமபிரான்….

 

யானே என்னை அறிய கிலாதே

யானே என்றன தேயென் றிருந்தேன்

யானே நீ என் உடைமையும் நீ

வானே ஏத்துமெம் வானவ ரேறே…!....”

நம்மாழ்வார்திருவாய்மொழி….

 

 

 

 

 

Wednesday, August 5, 2015


” ஒன்றே யென்னின் ஒன்றேயாம்

பலவென் றுரைக்கிற பலவேயாம்

அன்றே யென்னின் அன்றேயாம்

ஆமே யென்னின் ஆமேயாம்

இன்றே யென்னின் இன்றேயாம்

இலதென் றுரைக்கின் இலதேயாம்

நன்றே நம்பி குடிவாழ்க்கை

நமக்கிங் கென்னோ பிழைப்பம்மா…”

யுத்த காண்டம்…. கடவுள் வாழ்த்து….

 

எங்கும் வியாபித்திருக்கும் பரம்பொருள் ஒன்றே…. இறைத் தத்துவத்தை உணர்த்துவதற்காக, பல்வேறு அவதாரங்களில் தன்னிருப்பை நிலைநிறுத்துகிறான்….

“ ஏகம் ஸத் விப்ரா: பஹுதா வதந்தி…”

 

“ ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமில்லாற்கு ஆயிரம்

திருநாமம் பாடிநாம் தெள்ளேணம் கொட்டாமோ…”

மாணிக்கவாசகர்…. திருவாசகம்….

 

இதே கருத்தை நம்மாழ்வாரும் திருவாய்மொழியில் வலியுறுத்துகிறார்…

“ ஒன்றெனப் பலவென அறிவரும் வடிவினுள் நின்ற

நன்றெழில் நாரணன் நான்முகன் அரனென்னும்….”

 

கவியரசர் கண்ணதாசன் எழுதிம் கே.வி.மகாதேவன் இசையமைப்பில் கே.பி.சுந்தராம்பாள் பாடிய, திருவிளையாடல் படப்பாடலை, “ ஒன்றானவன்… உருவில் இரண்டானவன்….”  இங்கு ஒப்பு நோக்கலாம்….!

 

ரூபம்…அரூபம்…எல்லாமுமான பரம்பொருள்… வானாகி, மண்ணாகி, வளியாகி, ஒளியாகி நிற்கின்றான்…..

“ வானன்று… காலன்று… தீயன்று… நீரன்று… மண்ணுமன்று… நானன்று… நீயன்று… அசரீரியன்று… சரீரியன்றே…” என்பார் அருணகிரிநாதர்….! எல்லா வடிவும் அவனே…

 

“ ஆணல்லன் பெண்ணல்லன் அல்லா அலியுமல்லன்

காணலும் ஆகான் உளனல்லன் இல்லை யல்லன்

பேணுங்கால் பேணும் உருவாகும் அல்லனுமாம்

கோனை பெரிதுடைத்தெம் பெம்மானைக் கூறுதலே….”

நம்மாழ்வார்…. திருவாய்மொழி….

 

எம்பெருமான்… இந்நிறத்தவன்…. இவ்வண்ணத்தவன் என்று எழுத ஒண்ணாதவன்…!

அவன் இராமபிரானாக அவதரித்ததன் நோக்கம் யுத்த காண்டத்தில்தான் தெரிய வரும்…

 

இராமாயணம், மகாபாரதம்—இந்த இரண்டு இதிகாசங்களிலும் போருக்கான அடிப்படைக் காரணங்கள் “பெண்” என்கிற  அம்சமே… முன்னதில் பெண்ணைச் சிறையெடுத்ததும், பின்னதில் பெண்ணை அவமானப்படுத்தியதும்; முக்கிய காரணங்கள்…. மிகப்பெரிய போர் மூள்வதற்குப் பெண் காரணமாயிருந்திருக்கிறாள்…. அழிவு சக்தியா பெண்….? பெண்ணை ஆக்க சக்தியாக்கி எந்தவொரு இலக்கியமும் உருவாகவில்லையா….? பெண்ணை அழிவு சக்தி என்று உருவகித்தது ஆண்தானே…?! இறையின் ஒவ்வொரு அவதாரத்திற்கும் ஒரு நோக்கம் இருக்கிறது… அந்த நோக்கம் நிறைவேற பெண்சக்தி தேவை…!

 

வானர சேனைகள் கடற்கரையில் வந்து தங்கிய செய்தியுடன், கம்பன் யுத்த காண்டத்தைத் தொடங்குகிறான்…

பெருந்திரளாக வானரப்படை சென்று தங்கியதால், அந்தப் பாரம் தரிக்க மாட்டாது; தென்திசை தாழ, வடதிசை உயர்ந்தது…. வடக்கண் உள்ள மலைகளும், பிறவும் வானைச் சென்று தீண்டின… என்கிறான் கம்பன்…. என்னவொரு அழகான கற்பனை….?!

“ முலையா நிலைய வுயர்கிரியும்

வாழி வற்றா மறிகடலும்

மண்ணும் வடபால் வான்றோயப்

பாழித் தெற்குள்ளன பொருப்பும்

நிலனும் தாழப் பரந்தெழுந்த….”

யுத்த காண்டம்…. கடல்காண் படலம்….

இப்படித் தொடர்ச்சியாக உருவகப்படுத்துவதற்கு; தமிழ் இலக்கணத்தில், ”தொடர்பு உயர்வு நவிற்சியணி” என்பார்கள்….

 

எம்பெருமான்… பார்வதியை மணந்த காலத்து; வடதிசை உயர, தென்திசை தாழ்ந்து; அகத்தியர் தெற்கண் சென்று, உலகைச் சமன் செய்ததாகக் கூறப்படும் புராணச்செய்தியை இங்கு ஒப்பு நோக்கலாம்….

அரசியல் நிகழ்வுகளில் கூட, “ வடக்கு வாழ்கிறது… தெற்கு தேய்கிறது…” என்று நாம் அடிக்கடி சொல்வதும் உண்டுதானே….!

 

“ கருமாமுகில் உருவா கனல் உருவா புனல் உருவா

பெருமால்வரை உருவா பிறவுருவா நினதுருவா

திருமாமகள் மருவும் சிறுபுலியூர்ச்சல சயனத்து

அருமா கடலமுதே உனதடியே சரணாமே….”

திருமங்கையாழ்வார்…. பெரிய திருமொழி….