Tuesday, June 2, 2015


” நமக்கு இவ்வளவு அழிவு செய்த அக்குரங்கை, உற்று அகலா முன்; பற்றிக் கொண்டு வாருங்கள்…” என்று கட்டளையிட்டான் இராவணன்…

 

கடலின் விளிம்பில், அநுமனை நாடி அருகுற்ற அரக்கவீர்ர்கள்; அவன் தனியாக இருப்பதைப் பார்த்தனர்… இந்த இடத்தில் கம்பனின் கவிப்புலமை எப்படித் தெறித்து விழுகிறது பாருங்கள்….?!

“ பற்றுதிர் பற்றுதிர் என்பார் எற்றுதிர் எற்றுதிர் என்பார்

முற்றினர் முற்று முனிந்தார் கற்றுணர் மாருதி கண்டான்…”

இவனைப் பிடித்துக்கொள்ளுங்கள்… பிடித்துக்கொள்ளுங்கள்… என்று சொல்வாரும், தாக்கி அடியுங்கள்… தாக்கி அடியுங்கள் என்று சொல்வாரும், அநுமனை வளைத்துக் கொண்டனர்….சொல்லின் செல்வன் அவர்களைப் பார்த்தான்…

 

வெவ்விய நெருப்புள்ள தன் வாலால், அவர்களை வளைத்துக் கொண்டான் அநுமன்… அரக்கவீர்ர்கள் அத்துணை பேரும் அழிந்து போயினர்… அநுமன் தன் வாலாற் கொளுத்திய தீயால், அசோகவனத்திலிருந்த பிராட்டிக்கு ஊறு வந்துவிட்டதோ என்று வருந்தினான்…ஆகாயத்தில் செல்லும் சாரணர், பிராட்டியிருக்கும் இடம் மட்டும் எரியாதிருக்கும் அதிசயத்தை; வியந்து பேசிக்கொண்டே செல்வதை உற்றுக்கேட்டு மனம் தேறினான்… அநுமன் இட்ட தீயால் அசோகவனமும், விபீஷணன் மாளிகையும் அன்றி, இலங்கை நகரில் மற்ற யாவும் அழிந்தன…!

 

பிராட்டியின் கற்பின் தன்மையைப் பாராட்டி உய்ந்தனன் அநுமன்… அசோகவனம் சென்று, பைந்தொடி தாள்கள் பணிந்தான்… அநுமனைக் கண்ட ஜானகி, மிகவும் குளிர்ச்சியடைந்தவளாய், “ யான் சொல்ல வேண்டியது வேறென்ன இருக்கிறது…?!.. உனக்கு வந்தனம்….” என்று அவனை வாழ்த்தினாள்….

 

“ தேவரீரைச் சேவிக்க விடை கொண்டேன்…” என்று சொல்லி பிராட்டியிடம் விடை பெற்றுக்கொண்டான் அநுமன்…” விரைவின் இவ்விடத்தை விட்டு நீங்கிச் செல்வேன்…” என்ற எண்ணமுடையவனாய், தன் மனத்தால் எம்பெருமானின் பூங்கழல் தொழுது, பேருருக் கொண்டு விசும்பிடைக் ( ஆகாய மார்க்கமாக ) கடிது போனான்…!

 

அநுமன் வரவை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருந்த அங்கதன் முதலிய வானர வீர்ர்கள் அமர்ந்திருந்த, சுரபுன்னை மரங்கள் அடர்ந்த மகேந்திர மலையினிடத்து வந்திறங்கினான் மாருதி..

 

பறவைக்குஞ்சுகள், இரை தேடச்சென்ற தாய்ப்பறவை வரக் கண்டன போல்; அநுமனைக் கண்டவுடன், உவகையில் உடல் பூரித்து நின்றனர்… “ தாய் வரக் கண்டது அன்ன உவகையிற் களித்தாரம்மா…”

மகிழ்ச்சியில் அழுதனர்… முன் நின்று ஆர்த்தனர்…. அநுமனைத் தொழுது வணங்கினர்…. அவனைக் கட்டித் தழுவினர்…. மாருதியைத் தூக்கிச் சுமந்தனர்… அன்பின் வழியது உயிர்நிலை… அன்பிற்குரியோரைக் காணாதிருந்து கண்டபோது; மகிழ்ச்சியால் அழுவதும், கண்ணீர் பெருக்குவதும் இயற்கை….

 

வானரர் அநுமனை நோக்கி, “ அண்ணலே… உன் ஒளி பொருந்திய முகமே… நற்செய்தியை எங்கட்கு உரைத்தது… அகத்தின் அழகு முகத்தில் தெரியும்… ஆதலால், தேனொடு கிழங்கும், காயும், கனியும் அரிதில் தேடிச் சிறப்புடன் இங்கு வைத்திருக்கிறோம்… அவற்றையெல்லாம் அருந்தி, உன் களைப்பைத் தீர்த்துக் கொள்வாயாக….” என்று அவனை உபசரித்தனர்….

 

அவ்வானரர்கள் அநுமனுடைய பாதங்களிலும், தோள்களிலும், தலையிலும், பெரிய கைகளிலும்; அரக்கர்களின் வாள்களாலும், வேல்களாலும், அம்பு மழைகளாலும் வகிர்ந்த புண்களை, “ ஊழ் கொள நோக்கி நோக்கி உயிர் உக உயிர்த்து நொந்தார்…” பார்த்துப் பார்த்து தம் உயிர் சிந்திப் போகுமாறு பெருமூச்சு விட்டு வருந்தினர்…

பரமபதம் போல அழியாது வயது பெற்ற சிரஞ்சீவி… பெருமான் பாதம் பணிந்த அவன்தான் சிறிய திருவடி…!

 

அநுமன் வாலி குமாரனான அங்கதனை வணங்கி, கரடிகளுக்கு அரசனான ஜாம்பவனை கால் உற பணிந்து, அதன்பிறகு அங்கே ஒரு புறத்தே அமர்ந்திருந்து, “ உங்கள் அனைவருக்கும் உலகுடை நாயகனான இராமபிரானது தேவியாகிய பிராட்டி, நன்மை, நலந்தருவனவான ஆசீர்வாதங்களைச் சொல்லியருளினாள்..” என்று கூறினான்… அவ்வாறு அநுமன் கூறியவுடன், வானரர் எழுந்து நின்று கரங்கள் கூப்பி, அன்பு மேலிட பிராட்டியை மனத்தால் இறைஞ்சித் துதித்தனர்… “ வன் திறல் உரவோய்… சென்றது முதலா..வந்தது இறுதியாய்.. நிகழ்ந்த செய்திகள் அனைத்தையும் எங்கட்குச் செப்புவாயாக….” என்று அநுமனிடம் வேண்டிக் கேட்டுக்கொண்டனர்…

 

“ தீதில் நன்னெறி காட்டி எங்கும்

திரிந்த அரங்கன் எம்மானுக்கே

காதல் செய் தொண்டர்க்கு எப்பிறப்பிலும்

காதல் செய்யும் என் நெஞ்சமே…

குலசேகராழ்வார்…. பெருமாள் திருமொழி…

No comments:

Post a Comment