Thursday, April 28, 2016


எத்துணை வகையினும், நன்மை பயக்கக்கூடிய நல்ல பொருள்களை உனக்குத் தெரிவித்தேன். நீ அவற்றை அறியும் ஆற்றல் இல்லாதவனாயினைஎன் தகைவனே.. என் பிழை பொறுத்தருள்வாய்..” என்று இராவணனை நோக்கிச் சொல்லிவிட்டு, விபீஷணன் இலங்காபுரியை விட்டு நீங்கினான்அனலன், அனிலன், அரன், சம்பாதி என்ற அமைச்சர்களாகிய நால்வரும் விபீஷணனோடு சேர்ந்து கொண்டனர்…. இந்நால்வரும் விபீஷணனின் மாமன்மார் என்று கூறுவாரும் உண்டு

 

ஐவரும் வாநரப்படையுடன், இராமன் தங்கியிருந்த அக்கரைக்கு ( தனுஷ்கோடி ) விரைவாகச் சென்றனர்மறுகரையை அணுகி, தீபஒளியில் கடலானது, பாற்கடல்போலக் காட்சியளித்த அந்த காட்சியை இரசித்தவாறே, வாநரப் பெருஞ்சேனையை கண்களாற் பார்த்தான் விபீஷணன்  ஊனுடை உடம்பின உயிர்கள் யாவையும் ஒருபுறம் நிறுத்தி, வாநரச்சேனையை மறுபுறம் நிறுத்தி எண்ணினால்; வாநரக்குலமே எண்ணிக்கையில் மிகுந்ததாக இருக்கும் போலிருக்கிறது….” என்று வாநரப்படையை வியந்த வண்ணம் தன் மந்திரிமாரைப் பார்த்துக் கூறினான்

 

அறம் வழுவாது நிற்கும் இராமபிரானிடம் நான் அன்பு பூண்டுள்ளேன்நல்ல கீர்த்தியினால் வரும் வாழ்வன்றி, பழியை விளைக்கும் வாழ்வை நான் விரும்ப மாட்டேன்இராவணன் என்னை வெகுண்டு விரட்ட, நான் அவனைத் துறந்தனென்…. இந்நிலையில் நான் செய்ய வேண்டியது என்ன…?..” என்று மந்திரிமாரை வினவினான்….

 

” எப்பார்க்கும் ஒப்பாரில்லாத தரும்மூர்த்தியான ஸ்ரீ இராமபிரானைத் தரிசித்தலே, இனி நாம் செய்ய வேண்டிய கடமை.. மாட்சியின் அமைந்தது அதுவேயாம்.. மற்று வேறு இலை..” என அமைச்சர்கள் நால்வரும் தெளிவாகச் சொன்னார்கள்…

 

” நல்ல உரைகளை மொழிந்தீர்கள்…” எல்லையில் பெரு குணத்து இராமன் தாளினை புல்லுதும் புல்லிய பிறவி போகவே…” அளவிறந்த நற்பண்புகளையுடைய இராமபிரானது அடியிணைகளை, நம்மைப் பற்றியுள்ள இந்த அரக்கர் பிறப்பு தவிரும்படித் தழுவுவோம்..” என்றான் விபீஷணன்…

 

“ முன்புறக் கண்டிலேன் கேள்வி முன்பிலேன்

அன்புறக் காரண மறிய கிற்றிலேன்

என்புறக் குளிருநெஞ் சுருகு மேலவன்

புன்புலைப் பிறவியின் பகைஞன் போலுமால்..”

யுத்த காண்டம்…. வீடணன் அடைக்கலப் படலம்…

 

“ இதற்கு முன்பாக நான் அவ்விராமபிரானைத் தரிசித்ததில்லை… அவனைப் பற்றி முன்பு கேட்டறிந்ததுமில்லை… அங்ஙனமிருந்தும் அப்பிரானிடம் அன்பு உறக் காரணம் ஒன்றும் அறியாதவனாக உள்ளேன்…. அவனை நினைக்கும்போதே, என் உடல் எலும்புகள் குளிர்ந்து போகின்றன… நெஞ்சு அனலிலிட்ட மெழுகாக உருகுகின்றது… அந்த இராமபிரான் இழிவான பிறப்பை வென்றொழிக்கவல்ல விரோதி போலத்தான் தோன்றுகிறான்….” புன்புலைப் பிறவியின் பகைஞன்….!

 

ஒருவரைப் பார்க்காமல், பேசாமல், அவரைப்பற்றி எதுவும் அறிந்து கொள்ளாமலேயே; அவர்பால் அன்பு தோன்றுமாயின் அஃது அப்பிராகிருத நட்பு எனப்படும்… அப்பூதியடிகளுக்கு அப்பர்பெருமான் மேலிருந்த அன்பும், கோப்பெருஞ்சொழன், பிசிராந்தையார் நட்பும் இவ்வகைத் தன்மையன…

 

“ என்பு எனக்கு உருகுகின்றது இவர்கின்றது அளவுஇல் காதல்

அன்பினுக்கு அவதி இல்லை அடைவு என் கொல்? அறிதல் தேற்றேன்…” என்று கிஷ்கிந்தா காண்டத்தில், இராமனைக் கண்ட மாத்திரத்தில் அநுமனுக்குத் தோன்றிய அகவுணர்வை இங்கு ஒப்பு நோக்கலாம்…

 

“ நன்னெஞ்சே! நம்பெருமாள் நாளும் இனிதமரும்

அன்னம்சேர் கானல் அணியாலி கைதொழுது

முன்னம்சேர் வல்வினைகள் போக முகில்வண்ணன்

பொன்னம்சேர் சேவடிமேல் போதணியப் பெற்றோமே…”

திருமங்கையாழ்வார்…. பெரிய திருமொழி….

Tuesday, April 12, 2016


விபீஷணன் மானிடர் மேல் அளவற்ற அன்பு வைத்திருக்கிறான் என்பதை உணர்ந்து, வெந்தணலில் உருகுபவன் ஆனான் வேதம் ஆயிரம் வல்லானறிவாளன் இலங்கேஸ்வரன்…

 

விபீஷணனின் குணாதிசயங்கள் பற்றி, இதற்கு முந்தைய பதிவுகளிலேயே நான் விரிவாக எழுதியிருக்கிறேன்… செய்நன்றி மறந்தவன்… தந்தையைப்போல் பிரியம் காட்டி வளர்த்த தமையனுக்குத் துரோகம் செய்தவன்… அவன் சந்தர்ப்பவாதி… தற்கால அரசியலோடு ஒப்பிட்டால் ஜெயிக்கிற கட்சியோடு கூட்டுச் சேருகிற ஒரு அரசியல்வாதி… அவனுடைய விசுவாசமற்ற குணத்திற்காகவே, இதிகாசக் கதாபாத்திரங்களில் மிகவும் விமர்சிக்கப்படுகிறவன்…. கும்பகர்ணனைப்போல் செஞ்சோற்றுக்கடன் அடைக்காவிட்டாலும், கூட பரவாயில்லை… எந்தப் பக்கமும் சேராமலிருந்திருக்கலாம் அல்லவா…? இராவணன் என்று பெயர் வைத்துக் கொள்வதைப் பார்த்திருக்கிறோம்.. விபீஷணன் என்று யாராவது பெயர் வைத்துக் கொண்டிருக்கிறார்களா…? சமூகம் அவனை ஒதுக்கி வைத்துவிட்டது…!

 

 இராவணன் விபீஷணன்மேல் வெறுப்பை உமிழ்கிறான்…

  சிலநாட்களுக்கு முன்பு, ஒரு குரங்கு வந்து நமது அழகிய கற்பகவனத்தைச் சூறையாடுகையில், “ இதனைக் கொன்று தின்றிடுமின்..” என்று நான் கட்டளையிட, “ தூதுவர்களைக் கொல்லுதல் நன்றன்று “ என்று சொல்லித் தடுத்தாய்… அதற்கு ஏற்பவே, மலர்மார்பனாகிய அம்மானிடரையேத் துணையென மனத்தில் உறுதி செய்து கொண்டனை…”

 

“ நம் பகைவரைக் கண்டு பயந்தால் நீ போர் செய்வதற்குத் தகுந்த வீரன் ஆகமாட்டாய்… நமக்குப் புகலிடம் என்று மானிடரிடம் பற்றுக் கொண்டாய்… அரக்கர் பிறப்பொழுக்கத்தினின்று மாறுபட்டு, வஞ்சனை மனத்திடை வைத்தாய்… எனவே உன்னுடன் பொருந்தி வாழ்வதைக் காட்டிலும், நஞ்சையுண்டு வாழ்வது நன்று….”

 

வெளிப்பகையைக் காட்டிலும், உட்பகை மிகவும் கொடியது..

“ உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்

ஏதம் பலவும் தரும். “

குறள்… 885.

உறவுமுறையோடு உட்பகை உண்டாகுமானால், அது மன்னனுக்கு இறக்கும் வகையான குற்றம் பலவற்றையும் தரும்…

விபீஷணனோடு கொண்ட உட்பகை இராவணனுக்கு மரணத்தைத் தேடித் தந்தது….

 

“ உடன்பிறப்பைக் கொன்றானே என்ற பழிக்குப் பயந்து, நான் கொல்லத் துணியவில்லை…. “ பழியினை உணர்ந்து யான் உனைப் படுக்கிலேன்..” ( எத்துணைக் கொடியவரிடத்தும் ஒரு சிறிது நற்பண்பில்லாமற் போகாது என்ற கூற்றினை இங்கு உணரலாம் ) மானிடர் புகழ் பாடுவதை நீ இன்னும் விடுத்த பாடில்லை. என்னை விட்டுச் சீக்கிரமே செல்வாயாக.. என் கண்முன்னர் இனி நிற்பாயானால் நீ இறந்து படுவாய்…” என்று வெகுண்டு மொழிந்தான் இலங்கேஸ்வரன்…

 

இவ்வாறு இராவணன் கூறியவுடன், மேல் செய்யவேண்டியதை ஆலோசித்து; துணைவருடனே தானும் எழுந்து, வானத்திடைச் சென்று நின்றான் விபீஷணன்… இராவணனுக்கு நன்மை பயக்கத்தக்கச் சொற்களைக் கூறுவானானான்…..

 

“ வாழ்வை விரும்புபவனே… நான் மொழிவதைக் கேட்பாயாக… நெடுங்காலம் இருந்து வாழ்தற்குரிய உன் உயிரைப் பற்றி ஒன்றும் கருதாதவனாய், அறிவு ஒழுக்கங்களில் இழிந்தவர்களின் உரைகளைக் கேட்டு கெடுதலுக்கு உடன்படுவையோ…? சிறந்த வாழ்வென்பது தரும நெறியினின்றும் மாறினவர்கட்கு உண்டாகுமோ….?..”

 

“ புத்திரர் குருக்களின் பொருவில் கேண்மையர்

மித்திர ரடைந்துளோர் மெலியர் வன்மையோர்

இத்தனை பேரையு மிராமன் வெஞ்சரம்

சித்திர வதைசெயக் கண்டு தீர்தியோ….”

யுத்த காண்டம்…. வீடணன் அடைக்கலப் படலம்…

 

“ உன்னுடைய புதல்வர்களும், உன் ஆசிரியர் முதலிய பெரியோர்களும், ஒப்பற்ற உறவினரும், நண்பர்களும், உன்னைப் புகலாகச் சார்ந்தவர்களும், பலமற்றவர்களும், பலம் பெற்றவர்களுமான இத்தனை பேரையும் இராமபிரானின் அம்பு சித்திரவதை செய்வதைப் பார்த்துப் பின்னர் நீ உயிர் விடப் போகின்றாயோ…?..”

 

“ தொழுது மலர்கொண்டு தூபம்கை யேந்தி

எழுதும் எழுவாழி நெஞ்சே ! – பழுதின்றி

மந்திரங்கள் கற்பனவும் மாலடியே கைதொழுவான்

அந்தரமொன் றில்லை அடை. “

பொய்கையாழ்வார்…. முதல் திருவந்தாதி…