வட இந்தியப் பயணம்… ( 6 )
இராம் ஜூலா சாலையில், மக்கள் கூட்டம் அலைமோதிய ஒர் உணவகத்தில் காலையுணவை முடித்துக் கொண்டோம்… வழக்கம்போல சப்பாத்தி, தால் தான்… :) தென்னிந்திய உணவு வகைகளை இங்கே சாப்பிடக்கூடாது… குறிப்பாக அரிசிச்சாதம்… சாவல் என்கிற அரிசிச்சாதத்திற்குப் பாசுமதி அரிசியைத்தான், வடக்கே பயன்படுத்துவார்கள்…. ஒரு கரண்டிக்கு மேல் அதைச் சாப்பிடுவது கஷ்டம்… :) மிகுந்த களைப்பாக இருந்தது…. மழை வேறு தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது…. ஆட்டோ பிடித்து விடுதிக்கு வந்து சேர்ந்தோம்…. ஓய்வெடுத்துக் கொண்டோம்…
இரண்டு மணிக்கு எழுந்து வெளியில் சென்று மதிய உணவு சாப்பிட்டோம்…. சப்பாத்தி சாப்பிட்டு எனக்கு போரடித்துவிட்டதால், நூடுல்ஸ் சாப்பிட்டேன்… ஓரளவுக்கு நன்றாகவே இருந்தது… ஆனால் விலையதிகம்… ஒரு ப்ளேட் 150 ரூபாய்… ரிஷிகேஷில் எல்லா உணவு விடுதிகளிலும் விலையதிகமாகவே இருக்கிறது… ஒரு சாதாரண தால் கூட 100 ரூபாய்.. பன்னீர் சப்ஜி 200 ரூபாய்…. ஓர் ஏழை யாத்திரிகன் இத்தனை விலை கொடுத்து எப்படிச் சாப்பிட முடியுமென்று யோசித்துக் கொண்டேயிருந்தேன்… நம் தமிழகத்தில் அம்மா உணவகம் இருப்பது போன்று, மலிவுவிலை உணவகங்களை உத்தராகண்ட் மாநிலம் செயல்படுத்தலாமே…. இரண்டு சப்பாத்தி, ஒரு கிண்ணம் தால் பத்து ரூபாய்க்கு கொடுக்கலாம்…
சுற்றுலாப்பயணிகளால் அரசுக்கு வருமானம் கொட்டுகிறது…. அடிப்படைச் சுகாதார வசதிகள் கூட இல்லை ரிஷிகேஷ், ஹரித்வாரில்… ஒரு கழிப்பறையோ, ஆரம்பச் சுகாதர நிலையமோ என் கண்ணில் படவேயில்லை… ஏதாவது உடல்நலக்குறைவு ஏற்பட்டால், கங்கையிலேயே ஜலசமாதி ஆகிவிட வேண்டியதுதான் போல… இந்த வருடப் பிப்ரவரியில் கும்பகோணத்தில் நடந்த மகாமகத்திற்கு; நடமாடும் கழிப்பறைகள், நடமாடும் மருத்துவமனைகளையெல்லாம் தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்தது…. வடக்கே உயர உயரப் போகும்போதுதான் சொந்த மண்ணின் அருமை புரிகிறது… அங்கே சென்று பாருங்கள்… நாமெல்லாம் கொடுத்து வைத்தவர்கள் என்பது புரியும்…. :)
மாலை ஐந்து மணிக்கு கங்காஆர்த்தி பார்ப்பதற்காகக் கிளம்பினோம்…. போகிற வழியில் சிவானந்தா ஆசிரமத்தைச் சுற்றிப் பார்த்தோம்… வெளிநாட்டவர்கள் வந்து தங்கி, யோகா முதலிய கலைகளைக் கற்கிறார்கள்…. எப்படித்தான் இத்தனை ஏக்கர்களை, அந்த இடத்தில் வளைத்துப்போட்டு ஆசிரமம் கட்ட முடிந்தது என்று வியந்து போனேன்… சிவானந்தா ஆசிரமம் மட்டுமல்ல… எக்கச்சக்கமான ஆசிரமங்கள் ரிஷிகேஷில்… ஒவ்வொன்றும் ஏக்கர் கணக்கில் பரப்பளவு கொண்டது… கார்ப்பரேட் சாமியார்கள் பெருகி விட்டார்கள் இந்தக் கலியுகத்தில்… :) ஒற்றைக் கோவணாண்டியாகத் திருவண்ணாமலையில் தவமிருந்த மகரிஷி ரமணரை நினைத்துக் கொண்டேன்… :)
ஒரு கி.மீ. தூரம் போல நடந்து, ஓரளவுக்குச் சுத்தமான ஒரு படித்துறையை அடைந்தோம்… அந்த அந்திவேளையில் கங்கைக்கரையில் அமர்ந்திருந்தது அற்புதமான அனுபவம்…! எழுத ஒண்ணாதது…! மனத்துக்குள் அமைதி குடிக்கொண்டிருந்ததை பரிபூரணமாக உணர்ந்தேன்…! ஆர்ப்பரிக்கும் கங்கை கூட அந்திவேளையில் அடக்கமாக ஓடுகிறாளோ என்று எனக்குத் தோன்றியது…. :) அரைமணிநேரம் கழித்து, ஆர்த்தியெடுக்கும் பூசாரிகள் வர ஆரம்பித்தார்கள்…. ஆர்த்தியெடுப்பதற்காக நம்மிடம் அன்பளிப்புக் கேட்டார்கள்…. நானும் இரண்டு அகல்விளக்குகள் வாங்கிக் கங்கையில் விட்டேன்… :)
ஆறரை மணிக்கு கங்கைக்கு ஆர்த்தியெடுக்கத் தொடங்கினர்…. எதிர்க்கரையில் இருந்த கீதாபவன் படித்துறையில் ஏராளமானவர்கள் அகல் விளக்குகளை ஏற்றி, கங்கையில் மிதக்க விட்டுக்கொண்டிருந்தனர்…. ஜெகஜ்ஜோதியாக ஆர்த்தி தெரிந்தது…. நான் அமர்ந்திருந்த படித்துறையிலும், ஒரு நாலைந்து பூசாரிகள் ஆர்த்தி காண்பித்தார்கள்…. இந்த தேசத்தின் தாயான கங்காமாதாவுக்கு ஆர்த்தியெடுத்து, மரியாதை செலுத்துவது எத்துணை புண்ணியம்…. ?! வேறெந்த நாட்டிலாவது நதிக்கு வந்தனம் செய்யும் வழக்கம் உண்டா…?! இந்த ஆத்மாவுக்குச் சந்தோஷம்… :) ஹரித்வாரிலும் இந்தக் காட்சியைப் பார்க்கப்போகிற எதிர்ப்பார்ப்புடன் விடுதிக்குத் திரும்பினோம்… :)
தொடரும்….