Tuesday, March 29, 2016


பைந்தமிழ்ப் பேயார்… ( 5 )

 

காரைக்காலம்மை திருவாலங்காட்டில் கயிலைக்காட்சி கண்டுகளித்தவுடன், பாடிய திருப்பதிகங்கள் திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் என்று வழங்கப்படுகின்றன…

 

“ கொங்கை திரங்கி நரம்பெழுந்து குண்டுகண் வெண்பற் குழிவயிற்றுப்

பங்கி சிவந்திரு பற்கள் நீண்டு பரடுயர் நீள்கணைக் காலோர்பெண்பேய்

தங்கி யலறி யுலறுகாட்டில் தாழ்சடை யெட்டுத் திசையும்வீசி

அங்கங் குளிர்ந்தனல் ஆடுமெங்கள் அப்ப னிடந்திரு ஆலங்காடே…”

 

“ மார்பகங்கள் சுருங்கி உடல் மெலிவடைந்ததால் நரம்புகள் எழுந்து தோன்ற,  கண்கள் பிதுங்கி பற்கள் வெளியே தெரிய, குழியான வயிற்றையும், சிவந்த தலைமுடியினையும், வாயின் முன்புறம் இரண்டு கோரைப்பற்களையும் கொண்டு, காட்டில் இருக்கும் நீண்ட காலையுடைய பெண்பேய் தங்கியிருந்து ஒலியெழுப்பும் வறண்ட மயானத்தில்; தாழ்ந்த சடையினை உலகின் எட்டுத் திசைகளிலும் வீசி, செருப்பில் நடனமிடும் எங்கள் தந்தையாகிய இறைவன் இருக்குமிடம் திருவாலங்காடாகும்…”

 

காரைக்காலம்மை இறைவனிடம் வேண்டி பெற்றுக்கொண்ட பேய்த்தோற்றத்தை முதல் பதிகத்திலேயே நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறாள்… இதே உடம்போடு அவள் நடமாடியிருக்கிறாள்.. பதிகம் பாடியிருக்கிறாள்…. இறைவனின் திருவிளையாடல்தான் என்னே….?!

 

காரைக்காலம்மை அற்புதத்திருவந்தாதி போலவே, திருவிரட்டை மணிமாலையையும் அந்தாதித் தொடையில் பாடியிருக்கிறாள்… வெண்பாவும், ஆசிரியப்பாவும் விரவி வருகின்றன இந்த இருபது பாடல்களிலும்… ஈசனே மேம்பட்ட தெய்வம் என்ற அவளுடைய நம்பிக்கையை அடியார்களிடம் மெய்ப்பித்து, அவர்களையும் சிவவழிபாட்டில் ஈடுபடச்செய்கிறது இந்தப் பதிகங்கள்…..

 

“ கிளர்ந்துந்து வெந்துயர் வந்தடும் போதஞ்சி நெஞ்சமென்பாய்

தளர்ந்திங் கிருத்தல் தவிர்திகண் டாய்தள ராதுவந்தி

வளர்ந்துந்து கங்கையும் வானத் திடைவளர் கோட்டுவெள்ளை

இளந்திங் களும்எருக் கும்இருக் குஞ்சென்னி ஈசனுக்கே…. “

 

“ மனமே… தினமும் துன்பங்கள் வருகிறபோது, எலும்பு வடிவத்தோடு இவ்வுலகிலிருந்து துன்பத்தை அனுபவிக்காமல், சடைமுடியில் கங்கையினையும், பிறைச்சந்திரனையும், எருக்கமலர்களையும் சூடிய ஈசனை வழிபட்டால் பிறவிகளை ஒழித்து வீடுபேறு அடையலாம்… “

 

தான் கொண்ட சமயத்தின் மீது மாறாப்பற்று கொண்டு, அவனருளாலே அவன் தாள் பணிந்து, அழகுவடிவம் ஒழித்து, பேயுருக்கொண்டு, பைந்தமிழ் பாடிப் பரவிய காரைக்காலம்மைக்கு; அவள் பிறந்த ஊரான காரைக்காலில் சிறப்பான ஆலயம் உண்டு… அவள் ஈசனிடமிருந்து பெற்ற மாங்கனி நிகழ்ச்சியை நினைவூட்டும் விதமாக, வருடந்தோறும் ஆனி மாதத்தில் மாங்கனித் திருவிழா காரைக்காலில் நடைபெறுகிறது….

 

பிறவாமை வேண்டும் என்று பாடிய காரைக்காலம்மைக்கு திருவாலங்காட்டில் வீடுபேறு கிடைத்தது….

 

சைவ சமயத்தைப் பரத கண்டமெங்கும் பரப்ப அவள் போட்ட விதை, இன்று உலகெங்கும் விருட்சமாய் வளர்ந்து வியாபிக்கிறது..

 

“ சீராளன் கங்கை மணவாளன் செம்மேனிப்

பேராளன் வானோர் பிரான்…”

 

நிறைந்தது….

 

 

Tuesday, March 22, 2016


பைந்தமிழ்ப் பேயார்… ( 4 )

 

அற்புதத் திருவந்தாதியில் எல்லாப் பாடல்களும் இருவிகற்ப நேரிசை வெண்பாக்களால் பாடப்பட்டவையே…. அத்துணைப் பாடல்களும் கற்கண்டு இனிமை…

 

எனக்கு எப்போதுமே ஒரு ஐயமுண்டு.. எந்த மொழியிலாவது 2000 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட இலக்கியங்கள்; தமிழ்மொழியில் இருப்பது போன்று, இத்துணை எளிமையாக பாமரர்களுக்கும் புரியும்படியாக இருக்கிறதா…? க்ஷேஸ்பியர் காலத்து ஆங்கிலத்தில் இலத்தீன் கலப்புச் சொற்கள் அதிகம்.. அந்த ஆங்கிலத்தைப் புரிந்து கொள்வதே கடினம்… ஆயிரம் வருடப் பாரம்பரியம் கூட இல்லாத மொழி ஆங்கிலம்…

 

ஆனால் நம் தமிழ்மொழி எத்துணை எளிமையான மொழி….?! செய்யுட்களில் பயின்று வந்த அதே மொழியைத்தான் நாம் இன்றளவும் பேசி வருகிறோம்… கிரேக்கம், எகிப்து, ரோமன் நாகரிகமெல்லாம் வழக்கொழிந்து விட்டன… ஆனால் தமிழ்… அன்றலர்ந்த மலர்போல், ஒவ்வொரு நாளும் பூத்துக் குலுங்கி மணம் பரப்புகிறது… கற்காலம் முதலே தமிழர் நாகரிகம் தோன்றிவிட்டது என்பதைத் தெளிவுபடுத்துகிறது அரிக்கமேடு அகழ்வாராய்ச்சிகள்… மிகுந்த செல்வச்செழிப்போடு இருந்த குடி தமிழ்க்குடி… இப்போதும் செல்வத்துக்கு ஒன்றும் குறைவில்லை…!

 

இறையுணர்வை பாமரனுக்கும் எளிதில் புரியும்படியான மொழியில் கொண்டு சென்றவை பக்தியிலக்கியங்கள்… காரைக்காலம்மை எளிமையான பாடல்கள் மூலம் இறையன்பை எல்லோரிடமும் உணவு போல ஊட்டினாள்…!

 

“ அன்றுந் திருவுருவங் காணாதே ஆட்பட்டேன்

இன்றுந் திருவுருவங் காண்கிலேன் – என்றுந்தான்

எவ்வுருவோன் நும்பிரான் என்பார்கட் கென்னுரைக்கேன்

எவ்வுருவோ நின்னுருவம் ஏது ?...”

 

“ உன்னுடைய திருவுருவம் என்னவென்று தெரியாமலே அடிமையாகி விட்டேன்.. அடிமையான பின்பும் அதை என்னால் அறிய முடியவில்லை… உன்னுடைய தலைவன் யாரெனக் கேட்டால் கேட்பவர்களுக்கு என்ன பதில் சொல்வேன்…? உன்னுடைய வடிவம்தான் என்ன..?..” என்று வினா எழுப்புகிறாள் அம்மை…

 

அவனுக்கு ஏது வடிவம்…? ஆதியும் அந்தமுமில்லாத அருட்பெருஞ்சோதியல்லவா….?!

 

அற்புதத் திருவந்தாதியில் காரைக்காலம்மையின் தமிழ் ஆளுமையைப் பல பாடல்களில் நாம் படித்து ரசிக்கலாம்… தமிழ் இலக்கணத்தில் அம்மைக்கு இருந்த புலமை நம்மை வியப்பிலாழ்த்துகிறது… தமிழ்மொழி ஆயிரக்கணக்கான சொற்களையுடையது… சொல்வளமை கொண்ட ஒரு மொழி…

 

“ காருருவக் கண்ட்த்தெங் கண்ணுதலே எங்கொளித்தாய்

ஓருருவாய் நின்னோ டுழிதருவான் – நீருருவ

மேகத்தாற் செய்தனைய மேனியான் நின்னுடைய

பாகத்தான் காணாமே பண்டு… “

 

“ ஆலகால விஷத்தை உண்டதால் கரியநிறமான கழுத்தையுடைய ஈசனே… பிரமனும், திருமாலும் அடிமுடி தேடிய காலத்தில் நீ எங்கு சென்று ஒளிந்தாய்..? மாயோன்… நின்னோடு ஓருருவாய் உனக்கும் இடம் கொடுப்பவன்…கங்கை நீரால் சூழப்பட்ட மேகத்தைச் சடைமுடிமேல் அணிந்த நீருருவ மேனியன்… முன்பொரு காலத்தில் உனக்கே தெரியாமல் ஒளிந்து கொண்டவன் என் ஈசன்…” என்று மாயோனைப் பார்த்துக் கேட்கிறாள் அம்மை…!

 

மாலறியா நான்முகனும் காணாமலை அண்ணாமலை…

 

வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது

நாதன் நாமம் நமச்சிவாயவே…

 

தொடரும்….

Saturday, March 19, 2016


பைந்தமிழ்ப் பேயார்… ( 3 )

 

ஆலங்காட்டுறை ஆடல்வல்லானின் மீது எல்லையற்ற அன்பு பூண்ட காரைக்காலம்மை; எம்பெருமானின் அருளைப் போற்றி அற்புதத்திருவந்தாதி, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள், திருவிரட்டை மணிமாலை என்னும் படைப்புகளை இந்தத் தன்னிகரில்லா தமிழ்மொழிக்குக் கொடையாகக் கொடுத்திருக்கிறாள்

 

அந்தாதி இலக்கியங்களுள் தொன்மையானதும், முதன்மையானதுமாகப் போற்றப்படும் அற்புதத் திருவந்தாதி 101 பாடல்களைக் கொண்டது.. இறைவன் மேல் கொண்ட அன்பு, அருட்திறம், அவன்தாள் பற்றுகின்ற சரணாகதிநிலை என்பனவற்றை மிக விரிவாகப் பாடியிருக்கிறாள்

தான் இளமைக்காலம் முதலாகவே, எம்பெருமானிடம் காதலாகிக் கசிந்து, உருகியதை முதல் பாடலிலேயே பதிவு செய்கிறாள்.

பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாங் காதல்

சிறந்துநின் சேவடியே சேர்ந்தேன்நிறந்திகழும்

மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே

எஞ்ஞான்று தீர்ப்ப திடர்… “

தமிழ் இலக்கணமுறைப்படி இவ்வகைப் பாடலை இருவிகற்ப நேரிசை வெண்பா எனலாம்முதலிரண்டு அடியில் ஓர் எதுகையும், மீதியிரண்டு அடிகளில் வேறோர் எதுகையும் பயின்று வருவது இரு விகற்பா எனப்படும்..

இரண்டாம் அடியின் ஈற்றடியில்நிறந்திகழும்என்றொரு தனிச்சொல் பயின்று, முதலடியானபிறந்துஎன்கிற சொல்லுக்கு எதுகையாக அமைந்திருப்பதால் இது நேரிசை வெண்பா….

யோசித்துப் பார்க்க வேண்டும்.. 1500 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட பாடல்எத்துணை எளிமையான தமிழில் எழுதியிருக்கிறாள்….?! பெண்கள் மிகுந்த புலமையுடையவர்களாய் இருந்திருக்கிறார்கள்

 

இந்தப் பாடலின் கருத்து மிக எளிமையானது

நான் பேசத் தொடங்கிய காலம் முதலாக; உன்னுடைய புகழைப் பாடி, உன் பாதங்களை வணங்கி வந்தேன்.. நீ எப்போது என்னுடைய பிறவியை நீக்கியருள்வாய்…” என்று கேட்கிறாள்..

 

அந்தாதி வகைப்பாடல் இல்லையா….? அடுத்த பாடலைப் பாருங்கள்

இடர்களையா ரேனும் எமக்கிரங்கா ரேனும்

படரு நெறிபணியா ரேனும்சுடருருவில்

என்பறாக் கோலத் தெரியாரும் எம்மானார்க்

கன்பறா தென்னஞ் சவர்க்கு… “

முதல் பாடலின் ஈற்றடியான இடர் ( தீர்ப்பது + இடர் = தீர்ப்ப திடர் ) இரண்டாவது பாடலுக்கு முதலடியாக அமைந்திருக்கிறதுஇதுவும் இருவிகற்ப நேரிசை வெண்பா தான்

 

என்னுடைய துன்பங்களை நீக்கவில்லையென்றாலும், எனக்காக இரங்கி அருள் புரியாவிட்டாலும், அவனை வணங்குகின்ற முறையைக் கற்பிக்காவிட்டாலும், எரிகின்ற நெருப்பில் எலும்பு மாலையை அணிந்து நடமிடும் ஈசனை வழிபடுவதிலிருந்து என் மனம் மாறாது. அவன்மேல் அன்பு செலுத்துவதை விடமாட்டேன்… எம்மானார்க்கு அன்பு அறாது என் நெஞ்சு அவர்க்கு…!

 

ஈசனை முதன்மைக் கடவுளாகக் கொண்டது சைவசமயம்… சைவத்தை தென்னகத்தில் பரப்பிய முன்னோடி என்று காரைக்காலம்மையைச் சொல்லலாம்….

 

“ அவர்க்கே எழுபிறப்பும் ஆளாவோம் என்றும்

அவர்க்கேநாம் அன்பாவ தல்லால் – பவர்ச்சடைமேல்….”

அற்புதத் திருவந்தாதி…. 3.

காரைக்காலம்மைக்கு முன்னூறு வருடங்கள் கழித்து உதித்த கோதை,

“ எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உந்தன்னோடு

உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்…. “

என்று பாடியதை இங்கு ஒப்பு நோக்கலாம்….

 

தொடரும்….

 

 

Wednesday, March 16, 2016


பைந்தமிழ்ப் பேயார்…. ( 2 )

 

புனிதவதியை விட்டுப் பிரிய நினைத்த பரமதத்தன், கடல் வாணிகம் செய்து பொருளீட்டப்போவதாகக் கூறி மரக்கலம் ஏறிச் சென்றான்…. பாண்டிய நாட்டிலுள்ள ஒரு துறைமுகத்தை அடைந்து, அங்கேயே வாழ்வை அமைத்துக் கொண்டான்… அவ்வூரில் ஒரு வணிகனின் மகளை பரமதத்தன் மணம் செய்து கொண்டான்.. அவனுக்குப் பெண்குழந்தையொன்று பிறந்தது…. அக்குழந்தைக்குத் தன் முதல்மனைவியான புனிதவதியின் பெயரையே வைத்தான்….

 

பரமதத்தன் பாண்டிநாட்டில் வாழ்ந்து வருவதையறிந்த புனிதவதியின் உறவினர்கள், புனிதவதியை அவள் கணவனிடம் சேர்க்கும் பொருட்டு, அவளை அழைத்துக் கொண்டு பாண்டிநாடு வந்தடைந்தனர்.. பரமதத்தனின் இல்லம் சேர்ந்தபோது, பரமதத்தன் தன் இரண்டாம் மனைவி, குழந்தையோடு புனிதவதியின் பாதங்களைப் பணிந்து வணங்கினான்….கணவன் தன்னை வணங்குவதைக் கண்டு புனிதவதி அச்சமடைந்தாள்…. உறவினர்கள் பரமதத்தனிடம், “ ஏன் உன் மனைவியை வணங்கினாய் …? “ எனக் கேட்டனர்…

 

அதற்குப் பரமதத்தன், “ இவள் மானிடப் பெண்ணல்ல… தெய்வப்பெண்… அதனால்தான் அவளை விட்டு விலகினேன்… அவளது பாதங்களைப் பணிகிறேன்… நீங்களும் அவளை வணங்குங்கள்…” என்று கூறினான்… இதைக்கேட்ட உறவினர்கள் “ ஈதென்ன மாயமென்று “ திகைத்தனர்…. கணவன் தன்னை வணங்குவதைக் கண்ட புனிதவதி, எம்பெருமானை மனமுருகி வேண்டி, “ எழில் நிறைந்த என்னுடைய உடல்வனப்பை நீக்கி, உன்னையே வணங்கி நிற்கும் பேய்வடிவம் ( எலும்பும், தோலுமான ஒரு உருவம் ) தந்தருளும்…” எனக் கேட்டாள்…. அவள் வேண்டிய அக்கணத்திலேயே, அழகிய உருவம் நீங்கப்பெற்று, பேய்வடிவம் பெற்றாள்….

 

“ ஊனடை வனப்பை எல்லாம் உதறிஎன் புடம்பேயாக

வானமும் மண்ணும் எல்லாம் வணங்குபேய் வடிவம் ஆனார்….”

சேக்கிழார்…. பெரிய புராணம்….

இறையருளால் பதிகம் பாடும் ஆற்றல் பெற்றாள்… காரைக்காலம்மை என்று அன்றுமுதல் அழைக்கப்பட்டாள்….

 

கயிலையங்கிரியை பார்க்க ஆவல் கொண்டு கயிலை யாத்திரை சென்றாள்… கயிலைமலை மேல் காலால் நடந்து செல்வதைத் தவிர்த்து, தலையால் நடந்து சென்றாள்…( இது எப்படிச் சாத்தியம் என்றே எனக்குப் புரியவில்லை..! ) அறிவியலுக்கு அப்பாற்பட்ட நிகழ்வாக நான் இதைப் புரிந்து கொள்ள முயல்கிறேன்….! காரைக்காலம்மை தலையினால் நடந்து வருவது கண்டு அன்னை உமையவள் ஈசனிடம், “ கயிலைமலை மீது எலும்பு உருவம் கொண்டு, தலையினால் நடந்து வருவது யாரெனக்” கேட்டாள்…. இதனைக் கேட்ட எம்பெருமான், “ என்னை மிக விருப்பமுடன் வழிபடும் அம்மை இவள்…” என்று கூறி, “ அம்மையே…! “ என்று புனிதவதியை அழைத்தான்… அம்மையும், “ அப்பா “ என அரற்றி, அவனருளாலே அவன் தாள் பணிந்தாள்…

 

“ அம்மையே என்னும் செம்மை ஒருமொழி

உலகம் எல்லாம உய்யவே அருளிச் செய்தார்…”

சேக்கிழார்… பெரிய புராணம்…

“ அம்மையே… நீ வேண்டுவது என்ன.. சொல்வாயாக…” என்று கேட்டான் அம்மையப்பன்…

“ பிறவாமை வேண்டும்; மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும்

மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும்நான் மகிழ்ந்து பாடி

அறவா நீ ஆடும்போது உன்னடியின் கீழ் இருக்க”..என்றார்…”

சேக்கிழார்…. பெரிய புராணம்…

 

அம்மையின் விருப்பத்தைக் கேட்டருளிய ஈசன், “ தென்திசையில் திருவாலங்காட்டுத்தலத்தில் நான் கயிலைக்காட்சி கொடுக்கிறேன்… அதனைக் கண்டு மகிழ்ச்சியடைந்து, என்னைப் பாடிக் கொண்டிருப்பாயாக…” என்று அம்மைக்கு அருள் புரிந்தான் ஆலங்காடன்…!

 

“ நீடுவாழ் பழன மூதூர் நிலவிய ஆலங்காட்டில்

ஆடுமா நடமும் நீ கண்டு ஆனந்தம் சேர்ந்து எப்போதும்

பாடுவாய் நம்மை” என்றான் பரவுவார் பற்றாய் நின்றான்…”

சேக்கிழார்… பெரிய புராணம்…

 

தொடரும்….

 

Monday, March 14, 2016


பைந்தமிழ்ப் பேயார்….. ( 1 )

 

தமிழ் இலக்கியத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பைச் செய்த, ஆகச்சிறந்த பெண்பாற் புலவர்களில் இருவரை ( கோதை, ஒளவை ) ஏற்கனவே பதிவு செய்திருக்கிறேன்… அந்த வரிசையில் இந்தப் பதிவு, புனிதவதி என்கிற இயற்பெயரைக் கொண்ட காரைக்காலம்மையைப் பற்றியது…

 

அம்மை தமிழுக்கு அளித்த கொடை…

அற்புதத் திருவந்தாதி…. 101 பாடல்கள்.

திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள்… 22 பாடல்கள்.

திருவிரட்டை மணிமாலை… 20 பாடல்கள்.

காரைக்காலம்மையாரின் பாடல்கள் பதினோராந்திருமுறையில் தொகுக்கப்பட்டுள்ளன… சைவ பக்தியிலக்கியத்தில் தேவாரம் கொண்டாடப்படுகின்ற அளவுக்கு, அம்மையின் பாடல்கள் புகழ் பெறவில்லை என்பதில் எனக்கு வருத்தமுண்டு….

 

புனிதவதி காலத்தால் மூத்தவள்…. கி.பி. நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தவளாக இருக்கலாம் என்பது வரலாற்றாய்வாளர்களின் துணிபு…. தமிழில் அந்தாதி என்கிற அரியவகைப் பாடலுக்கு ( ஒரு பாடலின் ஈற்றடியும், அடுத்த பாடலின் முதலடியும் ஒன்று போலிருப்பது அந்தாதி ) முன்னோடி; அம்மையின் அற்புதத் திருவந்தாதியும், திருவிரட்டை மணிமாலையுமே…

 

அவளுடைய பதிகம் பாடும் முறையைத்தான்; பிற்பாடு வந்த அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோர் பின்பற்றினர்…. காரைக்காலம்மை 63 நாயன்மார்களுள், மிகச்சிறப்பான பெண்பாற் புலவர்… தன்னைத்தானே “ காரைக்காற்பேய் “ என்றழைத்துக் கொண்டவர்…!  “ பேயார்க்கும் அடியேன்..” என்று சுந்தரர் அம்மையை, தன்னுடைய “ திருத்தொண்டத்தொகையில் “ குறிப்பிடுகிறார்….

 

புனிதவதியின் வரலாறு ஓரளவுக்கு, அனைவரும் அறிந்ததே… சுருக்கமாக அவளுடைய வரலாற்றை எழுதுகிறேன்…

சோழநாட்டின் கடற்கரை நகரமான காரைக்காலில் ( பண்டைய பெயர்… காரைவனம் ) வணிகர் மரபில் தோன்றிய தனதத்தன் – தர்மவதி தம்பதியருக்கு பங்குனி மாதம் ஸ்வாதி நட்சத்திரத்தில் உதித்த பெண் புனிதவதி… சிறுவயது முதலே, ஈசனிடம் மாறாப்பற்று கொண்டிருந்தாள்… திருமணப்பருவம் வந்தவுடன், நாகைப்பட்டினத்தைச் சேர்ந்த நிதிபதி என்னும் வணிகனின் மகன் பரமதத்தனுக்கு புனிதவதியை மணம் செய்து கொடுத்தனர்….

 

புனிதவதி ஒரே மகளாதலால், நாகைக்கு அனுப்ப மனமில்லாமல், மகளுக்கு காரைக்காலிலேயே ஒரு மாளிகை அமைத்துக் கொடுத்தான் தனதத்தன்… பரமதத்தன் தன்னுடைய வணிகத்திறமையால் செல்வம் பெருக்கினான்…. புனிதவதியோடு இனிதாக இல்லறம் நடத்தி வந்தான்…. புனிதவதி சிவனடியார்களுக்குத் தொண்டு செய்து வந்தாள்…

 

ஒருநாள் பரமதத்தனுக்கு அவனுடைய வாடிக்கையாளர் ஒருவர் இரண்டு மாங்கனிகளைக் கொடுத்தார்…. அவற்றை இல்லத்திற்கு அனுப்பி வைத்தான் பரமதத்தன்… அப்போது சிவனடியார் ஒருவர் மிகுந்த பசியோடு புனிதவதியின் இல்லம் புகுந்தார்…. வீட்டில் அரிசி உணவு மட்டுமே சமைக்கப்பட்டிருந்தது… கறியுணவு அப்போது சமைக்கப்படவில்லை…. ஆதலால் ஒரு மாங்கனியைத் துண்டங்களாக்கி, அடியவருக்கு இட்டு உணவு படைத்தாள் புனிதவதி… அவளின் உபசரிப்பில் அகமகிழ்ந்து, வாழ்த்தி விடைபெற்றார் சிவனடியார்…

 

பின்பு, பரமதத்தன் மதிய உணவிற்காக இல்லம் வந்தான்… அவனுக்கு உணவும், கறியமுதும் பரிமாறிய பின்னர், மீதமிருந்த ஒரு மாங்கனியை அவன் உண்ணக் கொடுத்தாள்…. மாங்கனியின் சுவையில் மயங்கிய பரமதத்தன், மற்றொரு மாங்கனியையும் இடுமாறு கேட்டான்… திகைத்த புனிதவதி, “ மற்றுமொரு கனிக்கு எங்கு செல்வேன்…? “ என்று மனம் வெதும்பி, எம்பெருமானிடம் முறையிட்டாள்… ஈசனருளால் அவள் கையில் ஒரு மாங்கனி கிடைத்தது… அந்த மாங்கனியைக் கணவனிடம் கொடுத்தாள்….ஏற்கனவே உண்ட மாங்கனியை விடவும், இந்த மாங்கனி சுவையில் மேம்பட்டிருக்கிறதே என்றெண்ணிய பரமதத்தன், ” இக்கனியை நீ எங்கு பெற்றாய்….” என்று மனைவியிடம் கேட்டான்….

 

புனிதவதி நடந்த விஷயங்களை மறைக்காமல் கணவனிடம் தெரிவித்தாள்… “ அப்படியானால் இறையருளால் மீண்டுமொரு கனியைப் பெற்று வா….” என்றான்… புனிதவதி இறைவனை வேண்ட மற்றுமொரு கனி வந்தது…. அந்தக் கனியை பரமதத்தன் கையில் கொடுக்க, அது அவன் கையிலிருந்து மறைந்தது…. பரமதத்தன் மனம் தடுமாறித் தன் மனைவியைத் தெய்வப்பெண் என்று கருதி, அவளை விட்டுப் பிரியும் எண்ணம் கொண்டான்…

 

“ அணிகுழ லவரை வேறோர் அணங்கெனக் கருதி நீங்கும்

துணிவுகொண் டெவர்க்குஞ் சொல்லான் தொடர்வின்றி ஒழுகுநாளில்…”

சேக்கிழார்….. பெரிய புராணம்….

 

தொடரும்…..

 

Thursday, March 10, 2016


விபீஷணன், தன் தாள் பற்றிக் கெஞ்சிய வார்த்தையைச் செவியுற்ற இலங்கேஸ்வரன் வெகுண்டான்

 

அந்த இராமன் சக்கரப்படைத் தாங்கிய திருமாலே என்று கூறினாய்நீ சொல்வது உண்மையானால்; கோழையான, துன்மதியையுடைய அந்தத்திருமால் எத்தனை போர்களில் என்னிடம் தோல்வியுற்றான்…? நான் இவ்வளவு காலம் ஆற்றிய செயல்களோ என் விருப்பத்தின்படி செய்தனவே…. அப்பொழுதெல்லாம் அதனைத் தடுப்பதற்கு வராமல், அந்தத் திருமால் உயிர்ப்படங்கிக் கிடந்தானோ…?...”

 

நான் இந்திரனைப் பெருஞ்சிறையில் அடைத்த நாளிலும், திசையானைகளை அவற்றின் தந்தம் அறும்படி உடைத்த நாளிலும், அந்தத் திருமாலை; யான் முன்னாளில் போர்க்களம் தோறும் துரத்திய காலத்திலும், தேவர்களின் உலகைச் சின்னாபின்னமாகும்படி நான் வெற்றி கொண்ட நாளிலும்நீ சொன்ன அந்தத் தேவன் வயதிலும், ஆற்றலிலும் சிறியவனாயிருந்தானோ…?...”

 

சிவனும், நான்முகனும், திருநெடுமாலும், மற்றுமுள்ள தேவர்களும் உடனுறைந்து அடங்க; மூன்று உலகங்களையும் நான் ஆட்சி புரிந்தபோது, அந்தத் திருமால் வலி ஒடுங்கப் பெற்றிருந்தானோஉரையாய்…”

 

நஞ்சின் வெய்யவன்விஷத்தைக் காட்டிலும் கொடியவனான இராவணன், “ கடுங்கோபம் காரணமாக விளையும் யுத்தத்தில், நீ எம்முடன் கிளம்பி வரவேண்டியதில்லை…. இந்தப் பெரிய நகரத்திலேயே இனிது தங்கியிருப்பாயாக…. பயப்படாதே… “ என்று அருகில் நின்ற விபீஷணன் முகத்தைப் பார்த்து, இரு கைகளையும் தட்டி, இடி இடிப்பது போன்று, பேரொலி விளையுமாறு வெடிச்சிரிப்பு சிரித்தான்….” கை எறிந்து உரும் என நக்கான்…”

 

பின்னர், விபீஷணன் இராவணனைப் பார்த்து, “ ஐயனேஉன்னைவிடவும் அதிகமான வலிமை படைத்தவரான பெரியோர்கள், முன்னாளில் இந்தத் திருமாலின் கோபத்தினால் தமது உறவுமுறையாருடனே இறந்துபட்டனர்…. இன்னமும் நான் உன்பாற் கூறவேண்டுவது உள்ளது…. இரணியன் என்பவனுடைய சரிதத்தைச் சொல்கிறேன்….” என்று சொல்லி, இரணியன் வதைப்படலத்தைச் சொல்லத் தொடங்கினான்..

 

இரணியன் கதை வான்மீகத்தில் இல்லைஸ்ரீநரசிங்கப்பெருமான் மேல் தனக்கிருந்த பக்தியை வெளிப்படுத்தவே, கம்பன் இந்தப் படலத்தை எழுதியதாகச் சொல்வார்கள்….

 

இரணியன் வாழ்க்கை வரலாற்றை விபீஷணன் கூறக் கேட்டும், இராவணன் தன் மனதை மாற்றிக்கொள்ளவில்லை…. பிராட்டியின் மீதிருந்த மோகத்தால், அவன் உள்ளத்தில் காமத்தீ கொழுந்து விட்டெரிகிறது… “ மூட்டிய தீயென முடுகிப் பொங்கினான்…”

 

இராவணன் விபீஷணனை நோக்கி, “ வன்மையோய்இரணியன் என்பவன் எங்கள் மூதாதையர்களைக் காட்டிலும் வலியன்தன்னைச் சரணடைந்தவரைக் காக்கவல்ல திருமால், அவனை அழித்து ஒழித்தான் என்று கருதி அவனிடம் அன்பு கொண்டாய்…. எத்தகைய வலியையும் மரணம் என்ற ஒரு விஷயம் மாற்றிவிடும்….”

 

தன்னைப்பெற்ற, தன்னுடைய தந்தையின் உடலத்தை மாயவன் பிளந்திட, வருந்தாது மகிழ்ச்சி கொண்ட அவன்மகன் பிரகலாதனும்; நம்முடைய விரோதிகளிடத்து அன்பு பூண்டொழுகும் நீயுமே நிகர்மற்றவர்கள் உங்களுக்கு ஒப்பாகப் பொருந்துவரோ…?...”

 

வலிமை நிறைந்த இரணியன்தன் மகனான பிரகலாதன் தன்மைபோன்று, நீ கருதுகின்ற காரியம் இனிது முடிந்து, நான் அந்த இராமனிடம் தோல்வியுற்ற பின்னர், “ ஏழை நீ.. என் பெருஞ்செல்வம் எய்திப்பின் வாழவோ மதித்தனை..” என் செல்வத்தை நீ அடைந்து வாழவேண்டும் என்று எண்ணுகிறாய் போலும்அந்த எண்ணம் நிறைவேறாது….”

 

“ முன்னரே உறவுமுறையார் போன்று, அந்த இராம இலக்குமணரிடம் நட்பு வளரப் பெற்றனை….அரக்கரிடம் விரோதம் கொள்கிறாய்… மானிடர்க்காக என்புற உருகி இரங்குகிறாய்…எனவே, அவர்கள் உனக்குப் புகலிடம் அளிப்பார்கள்.. உன்னைக் குறித்து வேறு ஏதேனும் சொல்வது அவசியமா…?...”

 

“ நண்ணின மனிதரை நண்பு பூண்டனை

எண்ணின செய்வினை யென்னை வெல்லுமா

றுண்ணினைத் தரசின்மே லாசை யூன்றினை

திண்ணியதுன் செயல்பிறர் செறுநர் வேண்டுமோ….”

யுத்த காண்டம்…. விபீஷணன் அடைக்கலப் படலம்….

 

” எனக்குப் பகைவராக அணுகிய மானிடரிடம் நட்புக் கொண்டாய்.. நீ செய்ய வேண்டிய காரியத்தை நன்கு ஆராய்ந்தனை… என்னை வெற்றி கொள்ளும் வகையைப் பற்றி ஆழச்சிந்தித்து, இலங்கையரசின் மீது ஆசை கொண்டாய்…. உன் செயல் மிகவும் உறுதியாக உள்ளது…. எனக்கு உன்னைக் காட்டிலும் வேறு பகையும் தேவையோ…..?...”

 

“ மண்ணிலங்கு பாரதத்துத் தேரூர்ந்து மாவலியைப்

பொன்னிலங்கு தின்விலங்கில் வைத்துப் பொருகடல்சூழ்

தென்னிலங்கை யீடழித்த தேவர்க் கிதுகாணீர்

என்னிலங்கு சங்கோ டெழில்தோற் றிருந்தேனே….”

திருமங்கையாழ்வார்…. பெரிய திருமொழி….