வட இந்தியப் பயணம்… ( 8 )
வெள்ளிக்கிழமை ஜூன் 17… :) எனக்கு 47 வது பிறந்தநாள்……:)
காலையிலேயே வாட்ஸப்பும். முகநூலும் வாழ்த்துகளால் நிரம்பி வழிந்தன… சென்னையிலிருந்து தோழிகள் தொலைபேசியில் வாழ்த்தினார்கள்…. உறவினர்கள் வாட்ஸப்பில் வாழ்த்தினர்… அப்பா இருந்தவரைக்கும் காலையில் முதல் அழைப்பு அவருடையதாகத்தானிருக்கும்… அப்பா போனபிறகு, அம்மாவும் அதேபோல் காலையிலேயே வாழ்த்திவிடுவாள்… மத்தியம வயதின் விளிம்பில் இருப்பதாக வயது சொல்கிறது…. :) கல்லூரி நாட்களுக்குப் பிறகு பிறந்தநாள் கொண்டாடுவதை விட்டுவிட்டேன்….
:) மணநாளையும் கொண்டாடுவதில்லை…. :)
காலையுணவை முடித்துக்கொண்டு சண்டிதேவி, மாமன்ஸாதேவி என்று இரண்டு சக்தி ஆலயங்களுக்குச் சென்றோம்… இரண்டுமே மலையுச்சிக் கோவில்கள்… நடப்பதற்கென்று மலைப்பாதை தனியாக இருக்கிறது… நாங்கள் கேபிள்கார் மூலமாகத்தான் சென்றோம்… ஒரு நபருக்கு 160 ரூபாய் கட்டணம்… மலை மேலிருந்து கங்கையைப் பார்ப்பது ஒரு பரவசமான அனுபவம்… :) பாதயாத்திரையாகப் பெரிய கூட்டம் வந்திருந்தது… கூட்டத்தில் பிதுங்கி, சாமி தரிசனம் செய்வதற்குள் வியர்வையில் தொப்பலாக நனைந்து விட்டோம்… ஆலய தரிசனங்களை முடித்துக்கொண்டு விடுதிக்கு வந்து சேர்ந்தோம்… மதியம் 1.30 மணிக்கு நாங்கள் அறையைக் காலி செய்தாக வேண்டும்… எங்களுக்கு மாலை ஆறுமணிக்கு தில்லி செல்வதற்கான இரயில்… அரைநாளுக்கு மேலும் 1500 ரூபாய் கேட்டார்கள் விடுதியில்… தேவையில்லை என்று முடிவு செய்தோம்…
உத்தம் வாசலிலேயே காத்துக் கொண்டிருந்தான்… எங்களை ஹரித்வார் இரயில் நிலையத்தில் கொண்டுபோய் விட்டான்… நான் அவனுக்கு நன்றி சொன்னபோது, ஒருமாதிரி ஆகிவிட்டான்… இரண்டு நாட்களாக எங்களோடு ஒன்றிப் போய்விட்டான் உத்தம்… நீ நன்றாக வருவாய் என்று அவனை வாழ்த்தியனுப்பினேன்… ஹரித்வார் இரயில் நிலைய க்ளோக் ரூமில் பெட்டிகளை வைத்துவிட்டு, ரசீதைப் பெற்றுக்கொண்டோம்…. வெளியில் வந்து மதிய உணவு சாப்பிட்டோம்… இரயில் நிலையத்திற்கு எதிரில் இருந்த சாலையில், ஒரு விடுதியில் ஏஸி அறைகள் வாடகைக்குக் கிடைக்குமென்று எழுதியிருந்தது…. அங்கு போய் ஒரு மூன்று மணிநேரத்துக்கு, ஏஸி அறை வாடகைக்குக் கிடைக்குமா என்று விசாரித்தோம்..
500 ரூபாய் கேட்டான்… ஒரு அறையை வாடகைக்கு எடுத்துக்கொண்டு, ஓய்வெடுத்தோம்… 5 மணிக்கு அங்கிருந்து கிளம்பி, வழியில் ஒரு கடையில் டீ குடித்துவிட்டு, கொஞ்சம் பழங்கள் வாங்கிக்கொண்டு, இரயில் நிலையத்தை வந்தடைந்தோம்…
ஆறுமணிக்கு ஹரித்வாரிலிருந்து தில்லி வழியாக, மும்பை செல்லும் லோகமான்யா திலக் எக்ஸ்பிரஸில் ஏறிக்கொண்டோம்… எக்ஸ்பிரஸ் ரயில் பாசஞ்சர் ரயில் போல ஓடிக்கொண்டிருந்தது….
:) 11.30 மணிக்கு தில்லி நிஜாமுதீன் ஸ்டேஷனுக்குப் போகுமா என்று எனக்கு ஒரே சந்தேகம்… :) எட்டுமணிக்கு இரவு உணவுக்கு ஆர்டர் கொடுத்தேன்…. உணவு வரவேயில்லை… பசி மயக்கத்தில் மூவரும் தூங்கிப் போய்விட்டோம்… பத்தரை மணிக்கு உணவு வந்தது… “ இப்போது கொண்டுவந்து கொடுக்கிறாயே… இன்னும் ஒருமணி நேரத்தில் தில்லியே வந்துவிடும்…” என்று உணவு கொண்டு வந்தவனிடம் கடுப்படித்தேன்… “ நான் என்ன செய்யட்டும் மேடம்….வண்டி தாமதமாகப் போய்க்கொண்டிருக்கிறது… தில்லிக்கு 12.30 மணிக்குத்தான் போகும்..” என்றான்…
மூன்று சப்பாத்திகள், பன்னீர் சப்ஜி, உருளைக்கிழங்கு சப்ஜி, தால், சாதம்..எல்லாமும் சேர்த்து 150 ரூபாய்… பசி முத்திப்போன நிலையில் அத்தனையும் எப்படிச் சாப்பிட முடியும்…? ஆளுக்கு இரண்டு சப்பாத்திகளைச் சாப்பிட்டுவிட்டு, எஞ்சிய உணவைக் கொட்டி விட்டேன்… உணவை எறிவதென்பது என்னால் சகித்துக் கொள்ள முடியாத ஒரு விஷயம்… அந்த அகால வேளையில் வேறு என்னதான் செய்ய முடியும்.. என்னை நானே நொந்து கொண்டேன்…
தில்லி நிஜாமுதீன் ஸ்டேஷன் வரும்போது சரியாக நடுஇரவு 12.30 மணி… :) லக்கேஜைத் தூக்கிக்கொண்டு, சப்வே ஏறி இறங்கி; ஒரு ஆட்டோ பிடித்து, கரோல்பாக்கில் நாங்கள் முன்பதிவு செய்திருந்த ஹோட்டல் மெட்ரோ வந்து சேர்ந்த்போது நடுநிசி ஒருமணி…. :) 19 வருடங்களுக்குப் பிறகு, தில்லியில் காலடி எடுத்து வைக்கிறேன்… :)
தொடரும்….
No comments:
Post a Comment