Wednesday, August 5, 2015


” ஒன்றே யென்னின் ஒன்றேயாம்

பலவென் றுரைக்கிற பலவேயாம்

அன்றே யென்னின் அன்றேயாம்

ஆமே யென்னின் ஆமேயாம்

இன்றே யென்னின் இன்றேயாம்

இலதென் றுரைக்கின் இலதேயாம்

நன்றே நம்பி குடிவாழ்க்கை

நமக்கிங் கென்னோ பிழைப்பம்மா…”

யுத்த காண்டம்…. கடவுள் வாழ்த்து….

 

எங்கும் வியாபித்திருக்கும் பரம்பொருள் ஒன்றே…. இறைத் தத்துவத்தை உணர்த்துவதற்காக, பல்வேறு அவதாரங்களில் தன்னிருப்பை நிலைநிறுத்துகிறான்….

“ ஏகம் ஸத் விப்ரா: பஹுதா வதந்தி…”

 

“ ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமில்லாற்கு ஆயிரம்

திருநாமம் பாடிநாம் தெள்ளேணம் கொட்டாமோ…”

மாணிக்கவாசகர்…. திருவாசகம்….

 

இதே கருத்தை நம்மாழ்வாரும் திருவாய்மொழியில் வலியுறுத்துகிறார்…

“ ஒன்றெனப் பலவென அறிவரும் வடிவினுள் நின்ற

நன்றெழில் நாரணன் நான்முகன் அரனென்னும்….”

 

கவியரசர் கண்ணதாசன் எழுதிம் கே.வி.மகாதேவன் இசையமைப்பில் கே.பி.சுந்தராம்பாள் பாடிய, திருவிளையாடல் படப்பாடலை, “ ஒன்றானவன்… உருவில் இரண்டானவன்….”  இங்கு ஒப்பு நோக்கலாம்….!

 

ரூபம்…அரூபம்…எல்லாமுமான பரம்பொருள்… வானாகி, மண்ணாகி, வளியாகி, ஒளியாகி நிற்கின்றான்…..

“ வானன்று… காலன்று… தீயன்று… நீரன்று… மண்ணுமன்று… நானன்று… நீயன்று… அசரீரியன்று… சரீரியன்றே…” என்பார் அருணகிரிநாதர்….! எல்லா வடிவும் அவனே…

 

“ ஆணல்லன் பெண்ணல்லன் அல்லா அலியுமல்லன்

காணலும் ஆகான் உளனல்லன் இல்லை யல்லன்

பேணுங்கால் பேணும் உருவாகும் அல்லனுமாம்

கோனை பெரிதுடைத்தெம் பெம்மானைக் கூறுதலே….”

நம்மாழ்வார்…. திருவாய்மொழி….

 

எம்பெருமான்… இந்நிறத்தவன்…. இவ்வண்ணத்தவன் என்று எழுத ஒண்ணாதவன்…!

அவன் இராமபிரானாக அவதரித்ததன் நோக்கம் யுத்த காண்டத்தில்தான் தெரிய வரும்…

 

இராமாயணம், மகாபாரதம்—இந்த இரண்டு இதிகாசங்களிலும் போருக்கான அடிப்படைக் காரணங்கள் “பெண்” என்கிற  அம்சமே… முன்னதில் பெண்ணைச் சிறையெடுத்ததும், பின்னதில் பெண்ணை அவமானப்படுத்தியதும்; முக்கிய காரணங்கள்…. மிகப்பெரிய போர் மூள்வதற்குப் பெண் காரணமாயிருந்திருக்கிறாள்…. அழிவு சக்தியா பெண்….? பெண்ணை ஆக்க சக்தியாக்கி எந்தவொரு இலக்கியமும் உருவாகவில்லையா….? பெண்ணை அழிவு சக்தி என்று உருவகித்தது ஆண்தானே…?! இறையின் ஒவ்வொரு அவதாரத்திற்கும் ஒரு நோக்கம் இருக்கிறது… அந்த நோக்கம் நிறைவேற பெண்சக்தி தேவை…!

 

வானர சேனைகள் கடற்கரையில் வந்து தங்கிய செய்தியுடன், கம்பன் யுத்த காண்டத்தைத் தொடங்குகிறான்…

பெருந்திரளாக வானரப்படை சென்று தங்கியதால், அந்தப் பாரம் தரிக்க மாட்டாது; தென்திசை தாழ, வடதிசை உயர்ந்தது…. வடக்கண் உள்ள மலைகளும், பிறவும் வானைச் சென்று தீண்டின… என்கிறான் கம்பன்…. என்னவொரு அழகான கற்பனை….?!

“ முலையா நிலைய வுயர்கிரியும்

வாழி வற்றா மறிகடலும்

மண்ணும் வடபால் வான்றோயப்

பாழித் தெற்குள்ளன பொருப்பும்

நிலனும் தாழப் பரந்தெழுந்த….”

யுத்த காண்டம்…. கடல்காண் படலம்….

இப்படித் தொடர்ச்சியாக உருவகப்படுத்துவதற்கு; தமிழ் இலக்கணத்தில், ”தொடர்பு உயர்வு நவிற்சியணி” என்பார்கள்….

 

எம்பெருமான்… பார்வதியை மணந்த காலத்து; வடதிசை உயர, தென்திசை தாழ்ந்து; அகத்தியர் தெற்கண் சென்று, உலகைச் சமன் செய்ததாகக் கூறப்படும் புராணச்செய்தியை இங்கு ஒப்பு நோக்கலாம்….

அரசியல் நிகழ்வுகளில் கூட, “ வடக்கு வாழ்கிறது… தெற்கு தேய்கிறது…” என்று நாம் அடிக்கடி சொல்வதும் உண்டுதானே….!

 

“ கருமாமுகில் உருவா கனல் உருவா புனல் உருவா

பெருமால்வரை உருவா பிறவுருவா நினதுருவா

திருமாமகள் மருவும் சிறுபுலியூர்ச்சல சயனத்து

அருமா கடலமுதே உனதடியே சரணாமே….”

திருமங்கையாழ்வார்…. பெரிய திருமொழி….

 

 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment