Friday, February 19, 2016





தமிழ்க் காதலி….. ( 3 )

 

அதியமானுக்கும், தொண்டைமானுக்கும் இடையே நிகழவிருந்த போரைத் தடுத்து நிறுத்தினாள் ஒளவை…. அவள் பாடிய வஞ்சப்புகழ்ச்சிப் பாடல் இது…

“ இவ்வே பீலி அணிந்து மாலைசூட்டிக்

கண்திரள் நோன்காழ்  திருத்தி நெய்யணிந்து

கடியுடை வியன்நக ரவ்வே அவ்வே

பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து

கொல்துறைக் குற்றில மாதோ….. “

இவ்வே—இவைதாம்,  கண்திரள்—உடலிடம் திரண்ட,  காழ்—காம்பு,  கடியுடை—காவலுடைய,  கொல்துறை—கொல்லப்பட்டறை.

இங்கே இருக்கிற படைக்கலங்கள் மயிற்பீலியணிந்து, மாலைசூட்டி, திரண்ட வலிய காம்பு அழகுபடச் செய்யப்பட்டு, நெய் பூசப்பட்டு, காவலுடைய நின் அரண்மனையிலே உள்ளன….ஆனால் அங்கே அதியமானின் வேல்களோ, பகைவரைக் குத்துவதால் நுனி முரிந்து, கொல்லனின் கொட்டிலில் உள்ளன…

 

தொண்டைமானின் படைகலங்கள் அழகாக இருக்கின்றன என்று சொல்வதன் மூலம், அவன் போர்த்திறம் இல்லாதவன் என்பதைப் புகழ்வதுபோலப் பழிக்கிறாள் ஒளவை…. அதியமானின் படைக்கலங்கள் கொல்லனின் பட்டறையில் உள்ளன என்று சொல்வதன் மூலம், அதியமான் மிகுந்த போர்த்திறம் படைத்தவன்… அதனாலேயே அவனுடைய படைக்கலங்கள் உருச்சிதைந்து, சீர்செய்ய உலைக்களத்தில் உள்ளன என்று பழிப்பதுபோல அதியமானின் போராற்றலைப் புகழ்ந்து தொண்டைமானுக்குப் புலப்படுத்தினாள் ஒளவை….

 

ஒரு புலவர் இன்னொரு புலவரைப் பாராட்டுதல் என்பது பெரிய விஷயம்… அதியமான் நெடுமான் அஞ்சி, திருக்கோவலூர் மீது படையெடுத்துச் சென்று மலையமான் திருமுடிக்காரியை வென்றான். அப்போது பரணர் அவனைப் புகழ்ந்து பாடினார்.. அதைப்பார்த்து மகிழ்ந்த ஒளவை பரணரைப் பாராட்டினாள்…

 

அந்தக் காலத்தில் தமிழ்ப்புலவர்கள் அரசர்களை நம்பியே இருந்தனர்…. மன்னர்களைப் புகழ்ந்து பாடிப் பரிசில் பெற்ற வாழ்க்கை அவர்களுடையது…. அதை இப்போது படிக்கும்போது மனம் சொல்லொணாத் துயரடைகிறது…. தமிழ் யாசிக்கும் நிலையில் இருந்திருக்கிறதா….? தமிழ்ப்புலவர்கள் நாடோடி வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்களா….?

 

ஒளவை மிகவும் சுயமரியாதை உடையவள்…. அது அவள் பாடல்களில் எதிரொலிக்கும்.. ஒருமுறை அதியமானை நாடி ஒளவை வந்தபோது, வாயிற்காவலன் அவளைத் தடுத்தி நிறுத்தி விட்டான்…

“ வாயிலோய்…

கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி

தன் அறியலன் கொல் என்னறியலன் கொல்

அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென

வறுந்தலை உலகமும் அன்றே

மரங்கொல் தச்சன் கைவல்சிறாஅர்

மழுவுடைக் காட்டகத்து அற்றே

எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே…. “

வாயில் காப்போனே…. நெடுமான் அஞ்சி தன் தரமறியானோ…. அன்றி என் தரம் அறியானோ…. அறிவும், புகழும் உடையார் பசியால் இறந்தார் என்னும் வறுமையுற்ற உலகமன்று இது…. மரம் வெட்டும் தச்சன் காட்டுக்குச் சென்றால், ஏதாவது ஒருமரம் கிடையாது போகுமோ….? அதுபோல, பரந்த இவ்வுலகிலே எந்தத் திசையில் சென்றாலும் அந்தத் திசையில் எனக்குச் சோறு கிடைக்கும்….!

 

ஒளவையின் இந்த சுயமரியாதைக் குணத்திற்காகவே அவளைத் தலைமேல் தூக்கிவைத்துக் கொண்டாடலாம். தப்பேயில்லை…!

 

தொடரும்….

 
 
 
 

1 comment:

  1. The Best Casino in Reno - Mapyro
    › gaming › craps › gaming › 양산 출장안마 craps 안양 출장마사지 Best Casino in Reno. Located on the banks of the Colorado River, our 하남 출장안마 hotel is among the oldest hotels in Reno. No one is 영천 출장안마 afraid 상주 출장안마 to

    ReplyDelete