Thursday, February 18, 2016


தமிழ்க்காதலி….. ( 2 )

 

ஒளவை தன்னைத்தானே வருணித்துக்கொள்ளும் பாடல் புறநானூற்றில் வருகிறது….

“ இழையணிப் பொலிந்த ஏந்து கோட் டல்குல்

மடவரல் உண்கண் வாள்நுதல் விறலி….”

அல்குல்---இடை,  மடவரல்---பேதைப்பெண்,  உண்கண்---மையுண்ட கண்,  வாள்நுதல்---ஒளி பொருந்திய நெற்றி,  விறலி---நடனப்பெண்.

மணிக்கோவையான அணிகள் அணிந்த இடையையுடைய, மையுண்ட கண்களும், ஒளி பொருந்திய நெற்றியையும் உடைய, பேதப்பெண்ணான விறலி என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறாள் ஒளவை….! அவள் பேரழகியாக இருந்திருக்கிறாள் என்பதும் தெரியவருகிறது…

 

கோதை உட்பட எல்லாப் பெண்பாற் புலவர்களும் நல்ல அழகிகள்தான் போல….! அழகுணர்ச்சியின் நீட்சிதான் காமம்…. அதனாலேயே இன்பத்துப்பாக்கள் மிக எளிதாக எழுத வந்திருக்கிறது இந்தப் பெண்களுக்கு… தன் மனதுக்கினியவனை அவள் வருணிப்பதிலேயே தெரிகிறது அந்தக்காதலை பூரணமாக அனுபவித்து அவள் எழுதுகிறாள் என்பது….! தமிழின் பெண்பாற் புலவர்களின் அத்துணைப் பாடல்களிலும் காதல் நீக்கமற நிறைந்துள்ளது….

 

வெள்ளிவீதியார் அகத்திணைப்பாடல்கள் மட்டுமே படியிருக்கிறாள்….ஆண்களை விடவும் பெண்கள்தான் காதலை மிகவும் கொண்டாடியிருக்கிறார்கள்…. அதுவும்கூட பலதாரமணம் இருந்த சமூகத்தில், காதல்திருமணம் தான் பிரதானமாக இருந்திருக்கிறது…. கருத்துரிமை பெற்ற உயர்ந்த குடியாக தமிழ்க்குடி தன்னை அடையாளப்படுத்தியிருக்கிறது…. ஒரு அகத்திணைப் பாடலில் கூட தலைவி, ஒரே சாதியைச் சார்ந்த தலைவனைக் காதலித்ததாக எந்தச் சான்றுமில்லை…. சங்ககாலப் பெண்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்…. என்ன… இப்போது நமக்கிருக்கிற சட்டப்பாதுகாப்பு அவர்களுக்கில்லை…

 

“ எழுமரம் கடுக்கும் தாள்தோய் தடக்கை….” 

கணையமரம் போன்ற முழந்தாளளவு நீண்ட கையையுடையவனே….( அரசர்க்குரிய சாமுத்திரிகா லட்சணம் என்று இதைச் சொல்வது வழக்கம். ) என்று விதவிதமாக அதியமானை அழகுற வருணிக்கிறாள் ஒளவை….!

 

கிடைத்தற்கரிய நெல்லிக்கனியை தான் உண்ணாமல், தன்னை ஆழமாக நேசிக்கும் ஒளவைக்கு அளித்தான் அதியமான்….! அந்தக் கொடைத்திறனை வியந்து வாழ்த்தினாள் ஒளவை…

“ நீல மணிமிடற்று ஒருவன் போல

மன்னுக பெரும நீயே தொன்னிலைப்

பெருமலை விடரகத்து அருமிசை கொண்ட

சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது

ஆதல் நின்னகத்து அடக்கிச்

சாதல் நீங்க எமக்கு ஈத்தனையே…. “

நீல மணிமிடற்று ஒருவன்…. நீலகண்டன் என்னும் சிவபெருமான்….ஆலகால் விஷத்தை அருந்தியதால் ஈசனின் கழுத்து நீலமாக இருக்கும்…  பெருமலை---பெரியமலை,  விடரகத்து---மலைப்பிளவுகளையுடைய,  அருமிசை---ஏறுதற்கரிய உச்சி,  தீங்கனி---இனிய பழம்.

பெரிய மலையின் உச்சியில் பறிக்கப்பட்ட சிறிய இலையையுடைய அரிய நெல்லிக்கனியை, கனி உண்டால் பெறப்போகிற பயனை ( நீண்ட ஆயுள் ) உன் மனத்துக்குள் அடக்கி, சாகாவரத்துடன் நான் இருக்கும்படியாக, நீ அந்தக் கனியை எனக்கு அளித்தாய்… நீலமணி கழுத்துடைய சிவபெருமானைப் போல நிலைபெற்று வாழ்வாயாக…!

 

“ இனியை பெரும எமக்கே

இன்னாய் பெரும நின் ஒன்னா தோர்க்கே…”

எனக்கு நீ இனிமையானவனாய் உள்ளாய்…. பகைவர்க்கு இன்னாதவனாய் உள்ளாய்…..!

 

தொடரும்….

No comments:

Post a Comment