Tuesday, February 23, 2016


தமிழ்க் காதலி…. ( 5 )

 

நுட்பமான அரசியலறிவும், அதனை அஞ்சாது கூறும் துணிவும் கொண்ட ஒளவை…அதியமான நெடுமான்அஞ்சி தவிர, அவன் மகன் பொகுட்டெழினிக்காகப் பாடிய மூன்று பாடல்கள் புறநானூற்றில் உள்ளன…. அதுதவிர, நாஞ்சில் வள்ளுவன் என்றொரு மன்னனைப் போற்றி ஒருபாடல் பாடியிருக்கிறாள்…. புறநானூற்றில் 33 பாடல்களும், அகநானூற்றில் 4 பாடல்களும்,     குறுந்தொகையில் 15 பாடல்களும், நற்றிணையில் 7 பாடல்களுமாய் 59 பாடல்கள் சங்ககால ஒளவை தமிழுக்கு அளித்த கொடை….!

 

ஒளவையின் அகத்திணைப் பாடல்கள் சிலவற்றைப் பார்க்கலாம்..

தலைவனைப் பிரிந்த தலைவி, தன்னுடைய துயரமிகுதியைத் தோழிக்குச் சொல்வதாக ஒருபாடல்…

“ உள்ளின் உள்ளம் வேமே; உள்ளாது

இருப்பின் எம் அளவைத்து அன்றே, வருத்தி

வான்தோய் வற்றே காமம்,

சான்றோர் அல்லர்; யாம் மரீஇ யோரே….”

குறுந்தொகை…. பாடல் 103….

உள்ளினுள்ளும் வேமே---மனதுள் நினைத்தது,  வான்தோய் வற்றே---வானமளவு வளர்ந்து,  யாம் மரீஇ யோரே---யாம் அன்புடன் தழுவியவர்.

தோழி…. நம் தலைவரை நினைந்தோமாயின், அவர் நம்மை நினைக்காமல் பிரிந்திருத்தலை எண்ணியதும்; நம் உள்ளம் வேவத் தொடங்கிவிடும்… அதற்காக அவரை நான் நினையாதிருப்போம் என்றாலோ, அதுவும் நம்முடைய ஆற்றலின் அளவிற்குட்பட்டு அமைவதன்று…. காமநோய் நம்மை வருத்தி, வானத்தைச் சென்று தோய்வதுபோல வளர்ந்து பெருகுகின்றது… யாம் அன்புடனே தழுவியவர் என்பதன்றி, அவர் எம்பால் அன்புடையவரன்று….!

 

அகநானூறு, நற்றிணைப் பாடல்கள் எல்லாம் மிக நீண்ட வரிகளையுடையது…. 15 வரிகளுக்கு மேற்பட்டதாய் அமைந்திருக்கிறது…. சிலவரிகளை மட்டும் எடுத்துக் கொண்டால் முழுப்பாடலின் பொருள் மாறுபடுகிறது…. ஆகவே, சிறிய பாடலான குறுந்தொகையிலிருந்தே, ஒளவையின் தமிழாளுமைக்கு மற்றுமொரு சான்று எடுத்துக் கொள்ளலாம்…..

 

அந்தக்காலத்தில் பெற்றோர்களுக்குத் தெரியாமல் ( ஓடிப்போய் ) திருமணம் செய்வதற்கு உடன்போக்கு என்று சொல்வார்கள்….  அப்படிப் போவதைப் பெற்றோர்களும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பது ஆச்சரியந்தான்…! எத்தனைச் சுதந்தரமான சமூகம் பாருங்கள்….?!

 

தலைவனுடன் சென்றுவிடத் துணிந்தாள் தலைவி…. அதனைத் தோழி சொல்லக் கேட்டதும், தலைவன் பாலைவழியின் கொடுமையையும்,, தலைவியின் மென்மையையும் கருதி; அதற்கு உடன்பட மறுக்கிறான்…. அவனுக்குத் தோழி சொல்வது இது…

 

“ நீர்க்கால் யாத்த நிரைஇதழ்க்குவளை

கோடை ஒற்றினும் வாடாதாகும்

கவணை அன்ன பூட்டுப்பொருது அசாஅ

உமண்எருத்து ஒழுகைத் தோடுநிரைத் தன்ன

முளிசினை பிளக்கும் முன்புஇன் மையின்

யானை கைம்மடித்து உயவும்

கானமும் இனியாஅம், நும்மொடு வரினே… “

குறுந்தொகை…. பாடல்…388.

 

கவணை அன்ன பூட்டு---- கவண்கருவி போன்று தோல்பட்டையில் செய்யப்பட்ட நுகத்தடியில் பூட்டப்படும் எருது,

அசா---வருந்துதல்,  உமண்எருத்து ஒழுகை---உப்பு வணிகரின் எருதுகள் பூட்டிய வண்டிகள்,  தோட் நிரைத்தன்ன ---தொகுதியை வரிசையாக வைத்தது போல,  முளிசினை---உலர்ந்த மரக்கிளை,  கானம்---பாலை நிலங்கள்.

 

வரிசையான இதழ்களைக் கொண்டது குவளைமலர்.. அது நீரைத் தன்னடியிலேயே கட்டி வைத்திருக்கும் தன்மையுடையது… அதனால் கோடைக்காற்று வீசினாலும் வாடாதிருக்கும்…கவணைப் போன்ற பூட்டுப் பொருந்தியமையால் வருந்துகின்றன உப்பு வணிகரின் வண்டிகளில் பூட்டப்பெற்றிருக்கும் எருதுகள்….அவ்வண்டிகளைத் தொகுத்து வைத்தாற்போன்று தோன்றும் உலர்ந்த மரக்கிளைகளைப் பிளக்கும் ஆற்றல் இல்லாமையால் யானையானது தம் துதிக்கையை மடித்தபடியே நின்று வருந்துகின்ற பாலை நிலங்களும்…. உன்னோடு வந்தால் என் தலைவிக்கு இனிமையுடைதே…. ( சும்மா சாக்குபோக்கு சொல்லாதே…என் தலைவியை உடனே கூட்டிக்கொண்டு போ.! )

 

இப்படி.. ஒளவையின் தமிழ்ப்பணி தடையறாது சென்று கொண்டிருக்கிறது….

பறம்புமலையை ( பிரான் மலை ) ஆண்ட குறுநில மன்னன் பாரி இறந்தபிறகு, அவனுடைய மகளிர் அங்கவை சங்கவையை யாருக்காவது மணமுடிக்க நினைக்கிறார் பாரியின் நெருங்கிய நண்பரும், புலவருமான கபிலர்… மூவேந்தர்களுக்குப் பயந்து யாரும் மணம் செய்ய மறுக்கின்றனர்… அந்தப் பெண்களை அந்தணர் ஒருவர் பொறுப்பில் விட்டுவிட்டு, கபிலர் வடக்கிருந்து ( உண்ணா நோன்பு ) உயிர் விடுகிறார்… ஒளவை மூவேந்தர்களுக்கு அறிவுறுத்தி, அங்கவை சங்கவையைத் திருக்கோவலூர் மலையமான் மக்கட்கு மணமுடித்தாள் என்று சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்…

 

நாடு போற்ற வாழ்ந்த நற்றமிழ்ச் செல்வி ஒளவை…. அறிவிலே திருவுடைய பெண்கள் எல்லாம் ஒளவை என்னும் ஒரு பெயரால் அழைக்கப்பட்டனர்… பைந்தமிழ் பரப்பிய பெருமாட்டியைத் தமிழ் கூறும் நல்லுலகு என்றும் போற்றிக் கொண்டேயிருக்கும்….!

 

நிறைந்தது.…

 

 

 

No comments:

Post a Comment