Wednesday, February 17, 2016


தமிழ்க்காதலி…. ( 1 )

ஒளவையார் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது; கே. பி. சுந்தராம்பாள் நடித்து, கொத்தமங்கலம் சுப்பு எழுதி, இயக்கிய, ஜெமினி. எஸ். எஸ். வாசன் தயாரித்த ஒளவையார் படம்தான்… எல்லா ஒளவையார்களையும் ஒரே ஒளவையாக்கித் திரைக்கதை அமைத்த படம் அது… ஆனால் உண்மை அதுவல்ல….

 

ஒளவை என்கிற பெயரில், வெவ்வேறு காலக்கட்டங்களில் மூன்று பேர் இருந்திருக்கிறார்கள்…. அவர்களுடைய படைப்புகளில் வரும் தமிழ்ச் சொல்லாட்சியை வைத்து மொழி வல்லுநர்கள் ஆராய்ந்து இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்கள்….

 

சங்ககாலத்து ஒளவை…. கபிலர், பரணர், அதியமான், பாரி காலத்தில் இருந்தவள்…. நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு… என 59 பாடல்களைப் பாடியிருக்கிறாள்…. பக்தி இலக்கிய காலத்தில் இருந்த ஒளவை…. ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், நல்வழி, மூதுரை எழுதியிருக்கிறாள்…. கம்பர், ஒட்டக்கூத்தர் காலத்திலிருந்த ஒளவை… விநாயகர் அகவல் பாடியிருக்கிறாள்….

 

நான் இன்றைக்கு தமிழ்க்காதலியாக உங்களுக்கு அறிமுகப்படுத்தப் போகிறவள்….. கடைச்சங்ககாலத்தில் இருந்த மிகப் பிரபலமான பெண்பாற்புலவர் ஒளவை…. நாம் நினைப்பதுபோல் அவளொன்றும் மூதாட்டி இல்லை…. பாணர் குலத்தில் தோன்றி, பேரழகியாக விளங்கிய விறலி…( ஒரு பாடலின் பொருளை உணரும் வகையில் அதை நடன அசைவுகளால் ஆடிக்காட்டுபவள் ) பெரும் புலமை பெற்றவள்…. புறநானூற்றில் ஒளவையின் 28 பாடல்கள் உள்ளன…. அதில் 19 பாடல்கள் அதியமான் நெடுமான் அஞ்சிக்காகப் பாடியவை….!

 

தகடூரை ( தர்மபுரி ) ஆண்ட கடையெழு வள்ளல்களுள் ஒருவனான அதியமானுக்கும், ஒளவைக்கும் இடையே ஆழமான காதல் உண்டு…. போரில் அதியமான் இறந்தபோது, ஒளவை பாடிய இரங்கற்பா ( ஒப்பாரிப் பாடல் ) தமிழில் எழுதப்பட்ட ஒப்பாரிப்பாடல்களில் முதன்மையானதாகும்… இந்தத் தொடரில் விரிவாக அதைப்பற்றி நான் எழுதுகிறேன்….

 

ஒளவை பாடிய பொதுவியல் திணைப்பாடல்களும் பிரபலமானவையே…. அவள் பாடிய மிக அழகான பொதுப்பாடல் இது…..

ஆண்கள் உலகம்:

“ நாடா கொன்றோ காடா கொன்றோ

அவலா கொன்றோ மிசையா கொன்றோ

எவ்வழி நல்லவர் ஆடவர்

அவ்வழி நல்லை வாழிய நிலனே…. “

நாடானால் என்ன…. காடானால் என்ன… மேடானால் என்ன…. பள்ளமானால் என்ன…. எவ்விடத்தே ஆடவர் நல்லவராக விளங்குகின்றனரோ, அவ்விடத்தில் நிலமே நீயும் நன்றாக விளங்குவாய்… ஒருநாட்டின் வாழ்வும், தாழ்வும் நாட்டையாள்கின்ற மன்னரைப் பொறுத்தே அமைகிறது என்கிறாள் ஒளவை….!

 

ஒளவையின் உள்ளம் குடிகொண்டவன் அதியமான் நெடுமான் அஞ்சி…

எம்முளும் உளன்:

” களம்புகல் ஓம்புமின் தெவ்வீர் ! போர் எதிர்ந்து

எம்முளும் உளன்ஒரு பொருநன் வைகல்

எண்தேர் செய்யும் தச்சன்

திங்கள் வலித்த கால்அன் னோனே…. “

களம்—போர்க்களம்.. ஓம்புமின்---போற்றுமின், பொருநன்---வீரன், திங்கள் வலித்த---ஒருமாதமாகச் செய்யப்பட்ட, கால் அன்னோன்--- தேர்க்காலின் வலிமையும், அழகும் ஒப்பவன்..

பகைவர்களே… போர்க்களம் சேர்வதைப் போற்றுங்கள்… உங்களை எதிர்த்துப் போரிடும் ஆற்றல் உடையவன் என் உள்ளத்திலும் ஒருவன் இருக்கிறான்… ஒருநாளைக்கு எட்டுதேர் செய்யும் தச்சன், ஒருமாதங் கூடிச்செய்த தேர்க்காலைப் போன்ற அழகும், வலிமையும் உடையவன் அவன்….!

 

அதியமானை எத்தனைக் காதலுடன் வருணிக்கிறாள் ஒளவை….?!

“ கதிர்விடு நுண்பூண் அம்பகட்டு மார்பின்

விழவுமேம் பட்ட நற்போர்

முழவுத்தோள் என்ஐயைக் காணா ஊங்கே…. “

கதிர்விடு நுண்பூண்---ஒளிரும் கவசம் அணிந்த,  அம்பகட்டு மார்பின்---அழகிய மார்பினன், விழவு மேம்பட்ட நற்போர்--- களவேள்வி ஆற்றிச் சிறந்த, நல்ல போரைச் செய்பவன், முழவுத்தோள்---- முழவு என்பது மிருதங்கம் போன்றதொரு இசைக்கருவி… பலாமரத்தில் செய்யப்படுவது… முழவு போன்ற வலிமையான தோளினை உடையவன்….என் ஐயை----அவன் என் இறைவன், காணா ஊங்கே---காண்பதற்கு முன் அஞ்சுவீர்…. !

 

தமிழின் மூத்த காதலி என்று ஒளவையைச் சொல்லலாம்…. ஒரு நாடாளும் அரசன் மீது அன்புவயப்பட்டு, அதிக அளவில் பாடல்கள் பாடிய ஒரே பெண் ஒளவைதான்…..!

 

தொடரும்…..

 

 

 

 

 

No comments:

Post a Comment