Monday, February 15, 2016


உள்ளம் புகுந்தென்னை நைவித்து… ( 5 )

 

கோதை தெய்வாம்சம் பொருந்திய பெண்....அவள் காமவயப்பட்ட்தாக நீ எப்படி எழுதலாம் என்று தோழிகள் என்னிடம் விவாதம் செய்தனர்…. கோதை தெய்வத்தன்மையுடய பெண்ணாகவே இருந்துவிட்டுப் போகட்டும்…. இந்தப் பாடல்களையெல்லாம் அவள்தான் எழுதினாள் என்பதை மறுப்பதற்கில்லையே….  எதையும் மதக் கண்ணோட்டத்தில் பார்க்காமல்; இலக்கியரசனையோடு, பகுத்தறிந்து புரிந்துகொள்ள நாம் முயலவேண்டும்….

 

அக்காலச் சமூகத்தின் வெளிப்படைத்தன்மையை, கோதையின் பாடல்கள் மூலம் நாம் அறியலாம்…. அக்காலப் பெண்கள் காதல், காமம் போன்ற சுயவிருப்பம் சார்ந்த விஷயங்களில் எத்துணை கருத்துச்சுதந்தரத்தோடு இருந்திருக்கிறார்கள் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்… இருபதாம் நூற்றாண்டுப் பெண்ணான எனக்குக் கோதையின் பாடல்கள் புரட்சியாகத் தோன்றுகிறது என்றால், நாம் எப்பேர்ப்பட்ட பிற்போக்கான சமூகத்தில் வாழ்ந்து வருகிறோம் என்பதும் புரியும்….

 

கோதையின் காதல்பாடல்கள் தமிழிலக்கியத்தில் ஒரு மைல்கல்… அவளைப்போல காதல் ததும்பி, ததும்பி வழிய எழுதியவர் எவருமில்லை… அவள் கோடியில் ஒருத்தி…. இனியொருவர் அவளைப்போல பிறக்கப் போவதுமில்லை….!

 

கோதை, மாயவன் மதுசூதனனை மணம் செய்து கொள்வதுபோலக் கனாக் கண்டுரைத்த மொழி வாரணமாயிரம்…. ஆயிரம் வாரணம் ( யானை ) சூழ வலம்வந்து, மணவிழா நிகழ்வதாகக் கனவு காண்கிறாள்… அந்தப் பத்துப்பாடல்களிலும், அக்காலத்தில் வழக்கத்திலிருந்த மணநிகழ்வுகள் பற்றி அறிந்து கொள்ளலாம்….

“ இம்மைக்கும் ஏழேழ்பிறவிக்கும் பற்றாவான்

நம்மையுடையவன் நாராயணன் நம்பி

செம்மையுடைய திருக்கையால் தாள்பற்றி

அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் தோழி! நான்…!.... “

அவன்மேல் எத்தனை காதல் இருந்திருந்தால் இப்படி எழுதியிருப்பாள்….?! இந்தப் பிறவியில் மட்டுமல்ல….இனியெடுக்கப்போகிற எல்லாப்பிறவியிலும் அவன்தாள் பற்றுவதைத் தவிர இந்த ஜென்மம் கடையேறும் உபாயம் ஏது….?!

 

எம்பெருமான் எப்போது வந்தென்னை ஆட்கொள்ளப் போகிறான்….?

“ அழகப்பிரானார் தம்மையென் நெஞ்சத் தகப்படத்

தழுவிநின்று என்னைத் ததர்த்திக்கொண் டூற்றவும் வல்லையே….”

அவன் என்னை அணைத்துக் கொள்ள மாட்டானா….? பிரிவாற்றாமையால் வருந்துகிறாள் கோதை….

 

என் உள்மெலிவு எப்போது தணியும்….?!

” ஓத்நீர் வண்ணனென் பானொருவன்

தண்ணந் தொழாயென்னும் மாலைகொண்டு

சூட்டத்தணியும்…..”

அவன் அணிந்திருக்கும் துளசிமாலையை எனக்குச் சூடினால்; மனங்குழைவும், வாய்வெளுப்பும், உண்ணலுறாமையும் தணியும்…!

 

என்னரங்கத்து இன்னமுதனை நான் எங்கேயும் போகவிடமாட்டேன்….

“ குற்ற மற்ற முலைதன்னைக்

குமரன் கோலப் பணைத்தோளோடு

அற்ற குற்றம் அவைதீர

அணைய அமுக்கிக் கட்டீரே…. “

 

ஒருகட்டத்தில் அவளால் அவன் பிரிவை இனியும் தாங்க முடியாது என்று முடிவுக்கு வருகிறாள்….

“ கொள்ளும் பயன் ஒன்றில்லாத

கொங்கை தன்னைக் கிழங்கோடும்

அள்ளிப் பறித்திட்டு அவன் மார்பில்

எறிந்து என் அழல் தீர்வேனே…. “

உள்ளே உருகி எத்தனை நாள்தான் இத்துன்பத்தை நான் தாங்குவது….?

சிலப்பதிகாரத்தில் கண்ணகி, தன் மார்பகத்தைப் பறித்து வீசியெறிந்ததை இங்கே நினைவு கூறுகிறேன்…. அதீதக்காதல் வந்துவிட்டால், பெண்கள் தங்களைத் தாங்களே துன்புறுத்திக் கொள்வார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது….

 

கோதையை நீண்டநாட்கள் காக்க வைக்காமல், செம்மையுடைய திருமார்பில் அவளைச் சேர்த்துக்கொண்டான் திருவரங்கன்….!

 

கோதையின் திருப்பாவை, மார்கழி மாதம் முப்பது நாட்களும் எல்லா விண்ணகரங்களிலும் பாடப்படுகிறது… அவளுடைய வாரணமாயிரம் வைணவத் திருமணங்களில் இசைக்கப்படுகிறது…  மணப்பெண்கள் அவளைப்போலவே அலங்கரித்துக் கொள்கிறார்கள்…. இதெல்லாம் தமிழ்ச்சமூகம் கோதைக்குக் கொடுத்த மிகப்பெரிய கெளரவம்…..!

 

தமிழ் உள்ளளவும் கோதையும், அவள்தம் காதலும் நீங்காது நிலைப்பெற்றிருக்கும்….!

 

கோதைவாய்த்தமிழ் வல்லவர் குறைவின்றி வைகுந்தம் சேர்வரே…!

 

நிறைந்தது…..

 

No comments:

Post a Comment