Wednesday, February 24, 2016


விபீஷணன் உரைத்ததைக் கேட்ட இராவணன் மிகுந்த சினம் கொண்டான்… கண்களில் தீப்பொறி பறப்ப, “ தீயெழ நலந்திகழ் ஆரமும் மார்பும் குலுங்க..” வார்த்தைகளை மொழியலானான்…

 

“ ஐயனே… நான் விரும்பக்கூடிய மொழிகளைச் சொல்லுவதாகச் சொன்னாய்.. ஆனால்…பித்தர் கூறும் சொற்களையே பகர்ந்தாய்.. என் பெரு ஆற்றலை இகழத்தக்க மானிடர் வெல்வர் என்று நீ சொன்னது அவர்களிடம் உள்ள பயத்தினாலா… அல்லது அவர்களிடம் உனக்குத் தோன்றிய அன்பு காரணமாகவா…. என்ன காரணம்…? “

 

“ மானிடப் பசுக்களை வெல்வதற்கான வரம் நான் கேட்கப் பெறவில்லை என்று கூறினாய்… என்னிடம் குறை கற்பித்தாய்… எட்டுத் திக்குகளையும் செருக்கோடு தாக்குகின்ற யானைகளை வென்று, ஈசனின் கயிலாய மலையைப் பெயர்க்க நான் முன்பு வரம் பெற்றதுண்டோ….? “

 

“ சிந்திக்காமல் பயனற்ற சொற்களை மொழிந்தாய்… தேவர்களின் கொடிய போர்க்கருவிகள், போர்க்களத்தில் என்னை என்ன செய்துவிட்டன….? என்னைப் பற்றியது ஒருபுறமிருக்கட்டும்…. ஒரு தாய் வயிற்றில் என்னுடன் சகோதரனாகப் பிறந்த உன்னைக் காட்டிலும், அந்த மனிதர்கள் வலிமையுள்ளவரோ….? “

 

“ தேவர்கள் என்னிடம் பலமுறை தோற்றும், என்னை வெற்றி கொள்ளும் வன்மை ஒரு தடவையேனும் எய்தினாரில்லை…. விண்ணுலகத்தையும் பெயர்க்கும் வன்மை வாய்ந்தவன் யான்…. என்னையும், என் சுற்றத்தாரையும் கொல்லக்கூடிய வலிமையுள்ளவரும் இருக்கின்றனரா….? “

 

“ நந்தி கொடுத்த சாபத்தினால் நம்மை குரங்கு அழிக்கும் என்பாயாகில், நம்மிடம் வந்து சேர்ந்த சாபங்கள் எத்தனையோ… அவைகள் நமக்கு என்ன வன்மையைச் செய்துவிட்டன….? ஈசனிடம் வாலி பெற்றிருந்த வரத்தின் பெருமையை நான் அறியவில்லை…. யான் மனம் சோர்ந்திருக்க, என் வலிமையின் பாதி அவன்பால் சென்றடைந்துவிட்டது…. அதனாலேயே வாலியிடம் நான் தோல்வியுற்றேன்… மற்றும் வேறாக உள்ள குரங்குகள் எல்லாம் என்னை வெற்றி கொள்ளும் என்று எவ்வறு சொல்கிறாய்….? “

 

“ நீலகண்டனும், ஆழிப்படையேந்திய திருமாலும் நேர்ப்பட எதிராக நின்று எதிர்த்தாலும், அவர்களின் வலிமையிற் பாதி     அவ்வாலியைச் சென்றடையும்.. அத்தன்மையை நன்கு ஆராய்ந்து, அந்த மனிதனும் ( இராமனும் ) வாலிக்கு நேராகச் சென்று சண்டையிடுவதைத் தவிர்த்து, மறைவாக நின்று அம்பெய்து கொன்றான்…. “

 

இந்தச் செய்தி வான்மீகத்தில் குறிப்பிடப்படவில்லை…. இராமன் ஏன் வாலியை மறைந்திருந்து கொன்றான் என்பது பற்றி கம்பன் ஆராய்ந்திருக்க வேண்டும்… வாலி ஈசனிடம் பெற்ற வரத்தைத் தெரிந்து கொண்டுதான் இராமன் அவ்வாறு மறைந்திருந்து அம்பெய்தான் என்கிறான் கம்பன்….

 

“ முன்னரே பழுதுபட்டிருந்த ஈசனின் வில்லை முறித்து, உளுத்துப்போன மராமரத்துள் அம்பைச் செலுத்தி, கூனியின் வஞ்சனையால் அரசினைக் கைவிட்டு, மரங்களடர்ந்த வனம் புகுந்து,     நான் செய்த சூழ்ச்சியால் மனைவியை இழந்து, இன்னுயிர் சுமக்கும் அந்த மனிதனின் ஆற்றலை நீ அல்லாமல், பெருமையாகக் கருதுபவர் வேறு யார் இருக்கின்றனர்….?! “

 

இராவணன் இராமபிரானை இகழ்கிறான்… பிறன்பாற் கண்ட குறைவுகளைக் கூறி இகழ்வதைத் தமிழ் இலக்கணத்தில் இளிவரல் ( வழக்குத் தமிழில் நக்கலடிப்பது ! ) என்பார்கள்…. ஒன்றுக்கும் உதவாத பணிப்பெண் ( கூனி ) சூழ்ச்சியைக் கூட வெல்ல முடியாதவன் இராமன் என்று இகழ்கிறான்…

 

இத்தனையும் பேசி முடித்துவிட்டு, விபீஷணனைப் பார்த்து, ” நீ ஆராய வேண்டும்… அறிவில்லாதவனா என்ன…? “ என்றான்…. அங்கு கூடியிருந்த அரக்கர்களை நோக்கி, “ நாம் போருக்குப் புறப்படுவோம்… என்னுடன் எழுந்து வருக… “ என்று கூறினான்….

 

அப்போது விபீஷணன், “ இன்னும் ஓரு நன்மை பயக்கும் செய்தி ஒன்று நான் கூறக் கேட்பாயாக….” என்று சொன்னான்….

 

“ தன்னின் முன்னிய பொருளிலா வொருதனித் தலைவன்

அன்ன மானிட னாகிவந் தவதரித் தமைந்தான்

சொன்ன நம்பொருட் டும்பர்தஞ் சூழ்ச்சியின் துணிவால்

இன்னம் நேர்குதி போலுமென் றடிதொழு திரந்தான்…. “

யுத்த காண்டம்…. இராவணன் மந்திரப் படலம்….

 

தன்னிலும் முற்பட்ட பொருள் ஒன்றும் இருக்கப் பெறாத, ஒப்பற்ற தனித்தலைவனான பரம்பொருள், தேவர்களின் ஆலோசனையின் முடிவால்; நம்மைக் கொல்வதற்காகவே மானிடனாக வந்து பிறந்துள்ளான்… இன்னமும் அவனுடன் எதிர்த்து நிற்பாய் போலும்….” என்று இராவணனின் அடிகளை வணங்கிக் கெஞ்சினான் விபீஷணன்…..

 

“ பிரான் பெருநிலங் கீண்டவன் பின்னும்

விராய் மலர்த்துழாய் வேய்ந்த முடியன்

மராமர மெய்த மாயவன் என்னுள்

இரானெனில் பின்னை யானொட்டு வேனோ….! “

நம்மாழ்வார்…. திருவாய்மொழி….

No comments:

Post a Comment