Monday, January 12, 2015

உருக்காட்டுப் படலம்….சீதாப்பிராட்டியாருக்கு அனுமனின் விஸ்வரூப தரிசனம்—உருவம் காட்டும் நிகழ்வு—கிடைக்கப் பெற்ற படலம்…!

அரக்கியர் கண் விழித்திருந்தால், தன்னால் பிராட்டியை நேருக்குநேர் சந்திக்க முடியாமல் போய்விடுமென்று நினைத்த அனுமன், அவர்கள் அயர்ந்து உறங்குமாறு மந்திரப் பிரயோகம் செய்தான்…
“ இல்லாத உலகத்தெங்கும் இவனிசைகள் கூரக் கல்லாத கலையும், வேதக் கடலும்….” அனுமனுக்கு மந்திர வித்தையிலும் தேர்ச்சிய...ுண்டு…

காவல் அரக்கியர் தூங்குவதைக் கண்ட பிராட்டி, இராமனை நினைந்து துயருற்றாள்…

‘’ எஞ்சா அன்பால் ஆங்கு இன்ன பகர்ந்து இடர் உற்றாள்…”

“ உள்ளம் புகுந்தென்னை நைவித்து நாளும்
உயிர் பெய்து கூத்தாட்டுக் காணும்…” ….கோதை நாச்சியார்….நாச்சியார் திருமொழி… கோதை உருகுவதும் ஒன்றுதானே…!

இராமனது கோதண்டத்தின் நாணோசையை எப்பொழுது கேட்பேன்…?

“ வெஞ்சிலை நாணொலிதான் வருமேயுரையாய் வலியார் விதியே…”

பிரிவுத்துயர் வைதேகியை உருக்குலைக்கிறது…

“ நெஞ்சால் ஒன்றாலும் வழி காணாள்..நாளும் அயர்வுற்றாள்..அயர்கின்றாள்…”

பிரிந்தோர்க்கு இரவு புலராது நீடிக்கும்…
“ செல்லா இரவே சிறுகாவிருளே…”
வாடைக்காற்று அனலடிக்கிறது..
“ தழல் வீசி உலா வரு வாடை…”

நாராயணனே…தனி நாயகனே…உன்னைப் பிரிந்து இனிமேலும் என்னால் இருக்க முடியாது…
” என்றென் றுளம் விம்மி இருந்தழிவாள்….”

“ பழுதின்றிப் பாற்கடல் வண்ணனுக்கே
பணிசெய்து வாழப் பெறாவிடில் நான்
அழுதழுது அலமந்தம் மாவழங்க ஆற்றவும்….”
….கோதை நாச்சியார்….நாச்சியார் திருமொழி….
கோதையும், சீதையும் ஒன்றுதானே…அவதார நோக்கந்தான் வேறு….

சிறைப்பட்டிருக்கும் என்னை அவன் ஏற்றுக்கொள்வானா…?

“ சிறை இருந்தேனையும் புனிதன் தீண்டுமோ…”

தான் இனி உயிர் வாழ்தல் அறத்திற்கு மாறானது…ஆதலால் உயிர் நீத்தலே சிறப்பு எனப் பிராட்டி துணிவு கொண்டாள்…

“ எப்பொழுது இப்பெரும் பழியின் எய்தினேன்
அப்பொழுதே உயிர் துறக்கும் ஆணையேன்…”

அரக்கியர் உறங்கிக் கொண்டிருக்கும் இந்த சமயத்திலேயே, தம்முயிரைப் போக்கிக் கொள்ளவேண்டும் என்று நினைத்து மலர்கள் அசைந்து விளங்கிய ஒரு குருக்கத்திப் புதரை அடைந்தாள்…

“ ஈதலா திடமும் வேறில்லை என்றொரு
போதுலா மாதவிப் பொதும்பர் எய்தினாள்…”

சுற்றிய கொடியொன்றைத் துணித்து, தன் கழுத்தைப் பிணிக்குமாறு செய்தாள்…
“ பூங்கொடி தன்றனிக் கழுத்திடைத் தரிக்கும் மேல்வையின்…”

பிராட்டி உயிர் விடத் துணிந்ததை அனுமன் பார்த்தான்…அச்சத்தால் நடுக்கம் கொண்டான்….

“ அண்டர் நாயகன் அருள் தூதன் யான் என
தொண்டை வாய் மயிலைத் தொழுது தோன்றினான்…”
பிராட்டி முன் தோன்றி நின்றான்….

அடைந்தனென் அடியனேன் இராமன் ஆணையால்
குடைந்து உலகு அனைத்தையும் நாடும் கொட்பினால்
இடைந்தவர் உலப்பு இலர் தவத்தை மேவலால்
மடந்தை நின் சேவடி வந்து நோக்கினேன்..

மடந்தையே…இராமபிரான் கட்டளைப்படி, அடியேன் இங்கு வந்தடைந்தேன்…உலகமெல்லாம் துருவி, உன்னைத் தேடிச் சென்றவர் பலர்…நான் முன் செய்த தவப்பயனை இப்பொழுது அடைந்தபடியால். உன் சிவந்த பாதங்களின் தரிசனம் கிடைக்கப் பெற்றேன்…

என்னைப் பற்றி நீ சந்தேகம் கொள்ள வேண்டாம்…இராமபிரான் உனக்குக் கொடுத்தனுப்பிய அடையாளப்பொருள் என்னிடம் இருக்கிறது…நான் உண்மையாகவே இராமதூதன்தான்…
“ ஐயுறல் உனது அடையாளம் ஆரியன்
மெய்யுற உணர்த்திய உரையும் வேறுள….”

” சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கினியானைப் பாடவும் நீ வாய்திறவாய்…”
….திருப்பாவை…. :) :)

No comments:

Post a Comment