Thursday, January 8, 2015


அவள் ஒரு வேடுவப் பெண். அவளுக்குத் திருமணம் நிச்சயம் செய்தார் அவளுடைய தந்தை…திருமணத்துக்கு முதல்நாள்…அவள் வீட்டுக்கு ஆடுகளையும், மாடுகளையும் ஓட்டிக்கொண்டு வந்தார்..எதற்கென்று அவள் கேட்டாள்..திருமண விருந்துக்கு என்றார் தந்தை…திடீரென்று அவளுக்கு உள்ளுக்குள் பொறி தட்டியது…என் பொருட்டா இந்த ஜீவ ஹிம்சை…? இத்தனை நாள் எனக்கேன் இது தெரியாமல் போனது…? தந்தை வேட்டையாடிக்கொண்டு வரும் மிருகங்களை நான் சமைத்து உண...்டிருக்கிறேன்.. அப்போதெல்லாம் இந்த உணர்வு வரவில்லையே…இப்போது நினைக்கும்போது, மாமிசத்தை நினைத்து மனம் அருவெறுப்படைகிறதே…இதென்ன மாயம்…எனக்குப் புத்தி பேதலித்து விட்டதா…நான் வேடுவச்சி…மாமிசக்கறி சாப்பிடாமல், என்னால் எப்படியிருக்க முடியும்…என் மனம் உணர்ந்து கொண்டதை, என் தந்தையிடம் எப்படிச் சொல்வது..? அதை என் தந்தை எப்படி எடுத்துக்கொள்வார்…ஜீவ ஹிம்சை இல்லாமல் ஜீவித்திருக்க முடியாதா…திருமணம் வேண்டாமென்று என்று சொன்னால் தன்னைத் துன்புறுத்துவாரோ…கட்டயப்படுத்துவாரோ…தந்தை மனம் நோகும்படி இதுநாள் வரை நடந்ததில்லையே….இதிலிருந்து நான் எப்படித் தப்பிப்பது…? நாள் முழுக்க யோசித்தவள், நடுநிசியில் வீட்டைவிட்டு வெளியேறினாள்…

காட்டினில், மலையினில் அலைந்து திரிந்தாள்…வெகுநாளைய தேடலுக்குப் பின், ரிஷ்யமுக பர்வதத்தில், மதங்கமுனிவரின் ஆசிரமத்தை வந்தடைந்தாள்…தன்னை சிஷ்யையாக ஏற்றுக்கொள்ளும்படி மன்றாடினாள்..முனிவரும் மனமிரங்கி அவளுக்கு குருவாக இருந்து எல்லா விஷயங்களையும் கற்றுக்கொடுத்தார்..குருவுக்கு அத்தனை பணிவிடைகளும் அவள் செய்தாள்..குரு ஸ்தூல சரீரத்துக்கு விடை கொடுக்கும் நாளும் வந்தது…அந்தப் பெண்ணுக்குச் சொல்லொண்ணாத துக்கம்…குரு தன்னை விட்டு சூட்சும உலகத்திற்குப் போகப்போகிறாரே..தனக்கும் இதே போன்றதொரு மோக்ஷம் கிடைக்குமா…குருவிடம் கேட்டாள்..கவலைப்படாதே…இராமனும், இலக்குவனும் ஒருநாள் இந்த ஆசிரமத்துக்கு வருவார்கள்..அவனைப் பார்த்தபின், உன் பிறப்பு நீங்கும் என்று சொல்லி யோகத்தில் அமர்ந்து மகாசமாதியானார் மதங்க முனிவர்…அதற்குப் பிறகு, சதாசர்வ காலமும் இராமனையே நினைத்து தவத்தில் மூழ்கினாள் அந்த வேட்டுவப் பெண் சபரி…முதுமைப் பிராயம் வந்தது…இராமன் வந்தால், அவனுக்குக் குடுப்பதற்குக் காட்டில் கிடைக்கும் கனிகளைச் சேகரிக்கத் தொடங்கினாள். ஒவ்வொரு கனியாகக் கசக்கிறதா, புளிக்கிறதா என்று கடித்துப் பார்த்து சுவை மிகுந்த பழங்களை ஒரு கூடையில் சேகரித்து வைத்தாள்..முனிவர் சொன்ன அந்த நாளும் வந்தது… சீதையைத் தேடிக்கொண்டு இராமனும், இலக்குவனும் மதங்க முனிவரின் ஆசிரமத்துக்கு வந்து சேர்ந்தனர்…

இராமனைக் கண்ட சபரி, ‘’அண்ணலே…எனக்கு மனமிரங்கி விட்டாயா..நான் பிறவி எடுத்ததன் பயன் கிடைக்கப்போகிறதா…” என்றெல்லாம் அரற்றி, கண்ணீர் சொரிந்து, அவனைத் தொழுதாள்..சாப்பிடுவதற்குக் கனிகளைக் கொடுத்தாள்…எச்சில் பட்ட கனிகள் என்று இலக்குவன் வாங்க மறுத்தான்…உடனே இராமன், “இத்தனை வருடங்களாக சபரி எனக்காகக் காத்திருந்த அந்த அன்பு, தவம்தான் எல்லாவற்றையும் விட உயர்ந்தது..” என்று கூறியவுடன் இலக்குவனும் கனிகளை உண்டான்…இராமனைக் கண்குளிரத் தரிசனம் செய்தபின் சபரி வீடுபேறு அடைந்தாள்…அவளுடைய அந்தக் காத்திருப்பு, இராமபக்தியில் மிக உயர்ந்த ஸ்தானத்தைப் பெற்றது…! சபரி தவம் செய்த மலை சபரிமலை என்றாயிற்று…

அன்னது ஆம் இருக்கை நண்ணி ஆண்டு நின்று அளவு இல் காலம்
தன்னையே நினைந்து நோற்கும் சவரியைத் தலைப்பட்டு அன்னாட்கு
இன்னுரை அருளி தீது இன்று இருந்தனைபோலும் என்றான்
முன் இவற்கு இது என்று எண்ணல் ஆவது ஓர் மூலம் இல்லான்..

ஆரணியக் காண்டம்…சவரி பிறப்பு நீங்கு படலம்.

”இவனுக்கு முன்னே இப்பொருள் இருந்தது” என்று கூறத்தக்க ஒரு மூலப்பொருளைத் தனக்குப் பெற்றில்லாத இராமன், மதங்க முனிவரின் ஆசிரமத்தை அடைந்து, அங்கு நீண்ட காலமாக தன்னையே நினைத்துத் தவம் இருக்கும் சவரியைச் சந்தித்தான்…அவளுக்கு இன்பம் தரும் இனிய சொற்களைச் சொல்லி, “நீ எந்தத் துன்பமும் இல்லாமல் சுகமாக இருக்கின்றாய் போலும்..” என்று நலம் விசாரித்தான்…

இறைவன் நம்மை அழைத்துப் போக வரும்போது நாம் அவனை நினைப்போமோ…மாட்டோமோ என்று நினைத்து, முன் கூட்டியே சொல்லி வைத்து விட்டார் பெரியாழ்வார்…!

‘’ எய்ப்பென்னை வந்து நலியும் போது
அங்கேதும் நான் உன்னை நினைக்க மாட்டேன்
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்
அரங்கத்து அரவணைப் பள்ளி யானே….”

” சரணக் கமலாலயத்தை அரை நிமிஷ நேர மட்டில் தவமுறைத் தியானம் வைக்க அருள்வாயே…” என்கிறது அருணகிரிநாதரின் திருப்புகழ்…

பந்திக்கு முந்திக்கணும் என்று நகைச்சுவையாகச் சொல்வார்கள்…
ஜீவ முக்திக்கும் முந்திக் கொள்ள வேண்டும்தானே…:)
எங்கும் ஈசன் எனாதவர்க்கு இல்லையே…:)
See More


 

No comments:

Post a Comment