Monday, December 29, 2014

தசாவதாரங்களில் இராமாவதாரத்துக்குத்தான் முக்கியத்துவம் அதிகம்..பெண்குலத்துக்கு இராமனைத்தான்
பிடிக்கும்..தான் கொண்ட கொள்கையிலிருந்து இறுதிவரை மாறாதவன்..ஒரு சொல்..ஒரு வில்..ஒரு மனைவி..! என்னுடைய
கம்பராமாயணப் பதிவுகளைப் பக்திரசத்தோடு நான் எழுதவில்லை..பக்தி அதிகம் இருந்தால் அங்கே இலக்கியச்சுவை இருக்காது..
ஒரு மனிதன் எல்லா நற்குணங்களும் அமையப்பெற்று, வாழ்வில் உத்தம(புருஷோத்தம்) நிலையை எப்படி அடைகிறான் என்பதுதான் இராமகாதையின் சாராம்சம்..!...
மனிதன்கூட தெய்வமாகலாம் என்கிற கருத்தைதான் நான் பதிவு செய்ய விரும்புகிறேன்...

சிற்றன்னை(மாற்றாந்தாய்) என்பவளை, கொடுமைக்காரி என்று நாம் உருவகப்படுத்திக் கொண்டதற்குக் காரணமே கைகேயியின் கதாபாத்திரம்தான்..இந்த நாட்டில் கைகேயி என்று எவரும் பெயர் வைத்துக்கொண்டதாக நான் இதுவரை அறியவில்லை..அதைப்போலவே..சீதா, ஜானகி என்று பெயர் வைத்துக்கொண்டால் வாழ்நாளில் அவர்கள் மிகவும் துன்பப்பட நேரிடும் என்கிற ஒரு தவறான கருத்தும் இந்தச் சமுதாயத்தில் உலவிவருகிறது..
இராமனை நேரில் வரவழைத்து, தசரதனின் ஆணையை தானே அவனிடம் சொல்லிவிட வேண்டும் என்று கைகேயி முடிவு செய்தாள்..தன்னுடைய அரண்மனைக்கு வந்த இராமனிடம், “உன்னுடைய தந்தை ஒரு விஷயம் உன்னிடம் சொல்ல விரும்பினார்..நான் அதைச் சொல்லலாமா..” என்று கேட்க..”அரசகட்டளையாக இருந்தாலும், உங்களுடைய கட்டளையாக இருந்தாலும் நான் அதை மறுப்பேனா..”என்றான் இராமன்..அரசகட்டளையைக் கேட்டதும் இராமனின் முகம் செந்தாமரை மலரை ஒத்திருந்ததாம்...உணர்வுகளின் வார்த்தைகளோடு விளையாடியிருக்கிறான் கம்பன்...
மன்னவன் பணி அன்றாகின் நும் பணி மறுப்பெனோ என்
பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றது அன்றோ
என் இனி உறுதி அப்பால் இப்பணி தலைமேல் கொண்டேன்
மின் ஒளிர் கானம் இன்றே போகின்றேன் விடையும் கொண்டேன்...
அயோத்தியா காண்டம்...கைகேயி சூழ்வினைப்படலம்.
உங்கள் கட்டளையை ஏற்று இப்பொழுதே கானகம் போகின்றேன் என்றான்.
எந்தச்சூழலிலும் கலங்காதவன் இராமன் என்று கோடிட்டுக் காண்பிக்கிறான் கம்பன்..தம்பி நாடாள்வது தமக்குப் பெருமை என்கிறான்..அப்படிச்சொல்லும்போது அவன் முகம் மலர்ந்த தாமரையைப்போல் இருக்கிறது..
பதவி ஆசைக்காக அண்ணன், தம்பி சண்டையிட்டுக் கொள்ளும் சமகால அரசியல் சூழலை நினைத்துக் கொள்கிறேன்..
See More
 
 
 

No comments:

Post a Comment