Monday, December 29, 2014

காப்பியங்களாகட்டும்; திரைப்படங்களாகட்டும்..வில்லன், வில்லி கதாப்பாத்திரங்கள் இருந்தால்தான் சுவாரசியமாக இருக்கும்..வில்லனின் (போக்கிரி, துஷ்டன் என்று தமிழில் மொழிபெயர்த்து எழுதினால் அத்தனை நன்றாக இல்லை..சில ஆங்கிலப்பெயர்களை அப்படியே எழுதுவதுதான் அழகாக இருக்கிறது..கார் என்கிற வார்த்தைக்கு மகிழ்வுந்து என்று எழுதுவதில் எனக்கு மகிழ்ச்சியில்லை...! ) முக்கியத்துவத்தைப்
பொறுத்துத்தான் கதையில் திருப்புமுனை ஏற்படும்.
இராமாயணத்தில் முக்கிய வில்லிகளாக இரண்டுபேரைச்
சொல்லலாம். ஒன்று மந்தரை.....மற்றொன்று சூர்ப்பனகை..
இரண்டுபேருமே இராமனால் பாதிக்கப்பட்டவர்கள்..சமயம் பார்த்து இராமனைப் பழிவாங்கிவிட்டார்கள்..ஆக..
இராமகாதையில் திருப்புமுனை இந்த இரு பெண்கள்தான்...

மந்தரை..கூன்முதுகு உடையவள்..சிறுவயதில் இராமன்
விளையாடிக்கொண்டிருக்கும்போது, தன்னுடைய
வில்லில் களிமண் உருண்டையைப் பொருத்தி கூன்முதுகில்
விளையாட்டாக அடித்துவிட்டான்..அது அவளுக்கு மிகுந்த
வலியைக் கொடுத்தது...அப்போதிலிருந்தே அவளுக்கு
இராமனைக் கண்டாலே பிடிக்காது..
இராமனுக்கு முடிசூட்டப்போகிறார்கள் என்ற செய்தி
அறிந்ததும், கைகேயியிடம் சொல்லி எப்படியாவது
முடிசூட்டு விழாவை நிறுத்தவேண்டும் என்று முடிவு
செய்தாள்...கைகேயியின் அரண்மனைக்குச் சென்று
விஷயத்தைச் சொன்னாள்..கைகேயி மகிழ்ந்து
அவளுக்கொரு மாலையைப் பரிசாகக் கொடுத்தாள்.
மந்தரை அதைத் தூக்கி வீசியெறிந்தாள்..
துர்போதனைகள் மூலம் கைகேயியின் மனதை
மாற்றத் தொடங்கினாள்..
இரு வரத்தினில் ஒன்றினால் அரசு கொண்டு இராமன்
பெரு வனத்திடை ஏழ் இரு பருவங்கள் பெயர்ந்து
திரிதரச் செய்தி ஒன்றினால் செழுநிலம் எல்லாம்
ஒரு வழிப்படும் உன் மகற்கு உபாயம் ஈது என்றாள்...
அயோத்தியா காண்டம்..மந்தரை சூழ்ச்சிப்படலம்.
மன்னன் முன்பே உனக்கு இரு வரங்கள் கொடுப்பதாகச்
சொல்லியிருக்கிறான்..அந்த வரங்களை இப்போது கேள்..
ஒரு வரத்தால் இராமன் பதினான்கு வருடங்கள் வனவாசம்
செய்யவேண்டுமென்றும், இன்னொரு வரத்தால்
உன் மகன் பரதன் நாடாள வேண்டுமென்றும்
கேள் என்றாள்...
இந்தப்பாடலைப் படிக்கும்போதே, கூனியைக்
கண்டதுண்டமாக வெட்டிப்போடவேண்டும் என்று
மனம் பரபரக்கிறது..படிப்பவர்கள் மனதைக்
கொந்தளிக்கச் செய்கிறது..அதுதான் கம்பன் தமிழின் வலிமை...
வாள் முனையை விட பேனா( எழுத்து ) முனைக்குக்
கூர்மை அதிகம் என்று சும்மாவா சொன்னார்கள்..
See More
 
 

No comments:

Post a Comment